சேலத்தில் 500 கோடி? ஆந்திரா, வேலூரிலும் கைவரிசை காட்டிய விஜயா பானு.. என்ன நடந்தது?
சேலம்: சேலத்தில் ரூ.500 கோடி வசூல் செய்த அறக்கட்டளை பெண் நிர்வாகி விஜயா பானு ஆந்திரா மற்றும் வேலூரிலும் பொதுமக்களிடம் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 25 பேர் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். முன்னதாக விஜயா பானுவை கடந்த வாரம் கைது செய்த போலீசார் ரூ.12 கோடியே 65 லட்சம், 2½ கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.
சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த அறக்கட்டளை அமைப்பை வேலூரை சேர்ந்த விஜயா பானு உள்ளிட்ட சிலர் நடத்தி வந்துள்ளனர். இந்த அறக்கட்டளையில் பணத்தை முதலீடு செய்தால் அதிகவட்டி மற்றும் இரட்டிப்பு தொகை தருவதாக அறிவித்தார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பலர் அவர்களிடம் பணம் முதலீடு செய்தனர். கல்யாண மண்டபத்தில் பலர் பணம் முதலீடு செய்து கொண்டிருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.

மண்டபத்தில் நடப்பது மோசடி என்பதை அறிந்த போலீசார் மோசடி தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி விஜயா பானு, ஜெயபிரதா, பாஸ்கர், சையத் முகமது உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அங்கிருந்து ரூ.12 கோடியே 65 லட்சம், 2½ கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சேலத்தில் நடந்த இந்த மோசடி தமிழ்நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள், ஏராளமான மக்களிடம் ரூ.500 கோடி வரை மோசடி செய்திருப்பதாக தெரியவந்தது. மேலும் இந்த அறக்கட்டளையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் அம்மாபேட்டை மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 10 பேரும், வேலூரை சேர்ந்த 15 பேரும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி வெங்கடேசனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் விஜயா பானு மற்றும் சையத் முகமது உள்ளிட்டோர் தங்களிடம் ரூ.4 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக தங்களது புகாரில் தெரிவித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, அறக்கட்டளை பெண் நிர்வாகி விஜயா பானு ஆந்திரா, வேலூரில் அறக்கட்டளை தொடங்கி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கைதான விஜயா பானு, ஜெயபிரதா, பாஸ்கர் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) மனு தாக்கல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications