அதிமுக பிரமுகர் குடோனில் 8 மணி நேரம் ஐடி ரெய்டு.. சல்லடை போட்ட அதிகாரிகள்! சிக்கிய முக்கிய ஆவணங்கள்?
சேலம் : சேலம் அருகே அதிமுக பிரமுகருக்குச் சொந்தமான பருப்பு குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் தீவிரமாக சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடோனுக்கு சோதனை நடத்த அதிகாரிகள் சென்றபோது, சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்து, சிசிடிவி கேமராவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் மாலையில் வந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வேறு யாரும் வந்தார்களா என ஆய்வு செய்தனர். பின்னர் சுமார் 8 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறையினரின் இந்தச் சோதனைகளில் சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐடி ரெய்டு
பொது விநியோக திட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பருப்பு மற்றும் பாமாயிலை 5 நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இவ்வாறு இறக்குமதி செய்ததில் மத்திய அரசிடம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 23ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை 5 நிறுவனங்களில் நடந்தது. இந்தச் சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சேலம் குடோன்
இந்நிலையில், சென்னையை சேர்ந்த சந்தீப் என்பவரது பருப்பு குடோன் சேலம் அன்னதானப்பட்டியில் உள்ளது. இது அதிமுக பிரமுகர் மோகன் என்பவருக்கு சொந்தமான குடோன். இந்த குடோனை நேற்று முன்தினம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையிட வந்தனர். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களை எச்சரித்து குடோனுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றனர். குடோனை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

மீண்டும் வந்த அதிகாரிகள்
இதைத்தொடர்ந்து மாலை சுமார் 5 மணியளவில் சென்னை வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் வம்சி கிருஷ்ணா சாரா, தருமபுரி வருமான வரித்துறை அதிகாரி நாகராஜ் உள்பட 5 அதிகாரிகள் அந்த குடோனுக்கு சோதனை நடத்த வந்தனர். ஏற்கனவே பிரச்சனை நடந்ததால் காவல்துறையினரையும் பாதுகாப்புக்கு வரவழைத்தனர். அதிகாரிகள் குடோனில் உள்ள பருப்பின் இருப்பு குறித்து விசாரணை நடத்தினர்.

8 மணி நேரம் சோதனை
சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். வேறு யாராவது குடோனுக்கு வந்தார்களா எனவும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு குடோனில் உள்ள பருப்பின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சூப்பர்வைசர் அழகுமுத்துவிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அதிகாலை 1.15 மணிக்கு சோதனையை முடித்துக் கொண்டனர். இந்த சோதனை 8 மணி நேரம் நடந்துள்ளது.

விசாரணை
இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வில் அந்த குடோன் உரிமையாளர் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்பது தெரியவரும். அவ்வாறு வரி ஏய்ப்பு செய்து இருந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications