சேலம் பஸ் ஸ்டாண்ட்.. கையில் காலி பிளாஸ்டிக் பாட்டில்.. மறக்காம இந்த மெஷினை யூஸ் பண்ணுங்க
சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாவது பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரம் 3-ல் இந்த புதிய இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி இயந்திரம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிளாட்பாரம் எண் இரண்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் மூலம் இதுவரை சுமார் 8,712 பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு தூள் தூளாக அரைக்கப்பட்டு, முறையாக மறுசூழற்சி பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல தற்போது பிளாட்பாரம் எண் மூன்றில் மாநகராட்சி சாா்பில் ரூ.2.70 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பாட்டில் மறுசூழற்சி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாநகராட்சி ஆணையர் நேற்று துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர் இந்த இயந்திரத்திற்குள் 250 மில்லி முதல் 2.25 லிட்டர் வரையில் காலி பிளாஸ்டிக் பாட்டிலை போடும் போது, அவை மறுசூழற்சிக்கு ஏற்றவாறு அரைக்கப்பட்டு இயந்திரத்தின் அடிப்பகுதியில் சேகரிக்கப்படும் என்றார்.
மேலும் இந்த இயந்திரம் பற்றி தகவல் கூறிய அவர் காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போட்டவுடன், இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை அழுத்தி 5 நிமிடம் இலவசமாக மொபைல் போன்களுக்கு வேகமாக சார்ஜ் செய்யும் வசதி உள்ளதாக கூறினார். இது தவிர 250 மில்லி லிட்டர் சுத்திகரிப்பு குடிநீர் பெறுவது ஐந்து நிமிடம் இலவச வைபை வசதி, கூப்பன் உள்ளிட்ட 5 வகையான சலுகைகளை இலவசமாக பெறலாம் என்றார்.
பொதுமக்கள் இந்த இயந்திரத்தை உரியமுறையில் பயன்படுத்தி காலி பாட்டில்களை தூக்கி எறியாமல், இந்த இயந்திரத்தில் போட்டு மேற்படி இலவச வசதிகளை பெற்று பயன் பெற கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications