சேலம் சீட்டுக் கட்டு போல் சரியும் நாம் தமிழர் கட்சி.. கட்சியை விட்டு எஸ்கேப்பான ‘மேட்டூர்’ புள்ளி!
சேலம்: விழுப்புரம், திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் இருந்து நாம் தமிழர் முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றார்கள். அந்த வகையில் தங்கம், வைரம் ஆகிய மாவட்ட செயலாளர்கள் கட்சியை விட்டுச் சென்ற நிலையில் தற்போது மேட்டூர் நகர துணை தலைவரும், 40 உறுப்பினர்களுடன் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு சொந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வாக்கு சதவீதம் கிடைத்ததோடு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. ஆனால் அதற்குப் பிறகாக சீமானின் செயல்பாடுகள் அதல பாதாளத்திற்கு போனதாக கூறுகின்றனர்.
மேலும் சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர். ஏற்கனவே காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் குறித்து சீமான் பேசிய ஆடியோ வெளியிட்ட நிலையில், அவர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இது மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து சீமான் தற்போது முடிவு செய்திருப்பதாகவும், பணம் இருப்பவர்களுக்கே பதவி என்ற நிலைக்கு சீமான் சென்று விட்டதாகவும் குடும்ப அரசியல் செய்வதாக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட செயலாளர்களை தொடர்ந்து சேலம் மாவட்ட நிர்வாகிகளும் அடுத்த நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அழகாபுரம் தங்கம் அறிவித்தார். 15 ஆண்டுகளுக்கு மேலாக சீமானின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் திடீரென விலகுவதாக அறிவித்தது கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல நேற்று நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்தார்.
இது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் ஒரு நிர்வாகி சேலம் மாவட்டத்திலிருந்து கட்சியை விட்டு வெளியேறி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ஜீவானந்தம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடன் பயணித்த 40 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகிக் கொள்வதாகவும், தன்னுடன் பயணித்த உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜீவானந்தம் கூறியுள்ளார். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சேலம் மாவட்டத்தில் இருந்து மூன்று முக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சொல்லி வைத்தார் போல் அடுத்தடுத்து நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு என்ன காரணம் என்பது தெரியாமல் தலைமை குழம்பிப் போய் உள்ளது. அதே நேரத்தில் விலகியவர்கள் திமுக தமிழக வெற்றிக்கழகம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications