ஆடிட்டர் ரமேஷை அநியாயமாக கொன்னுட்டாங்க! சேலம் மேடையில் நாதழுதழுத்த பிரதமர் மோடி
சேலம்: பாஜக முன்னாள் மாநில செயலாளர் மறைந்த ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டார் என சேலம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நா தழுதழுக்க கண்ணீர் விட்டபடியே பேசினார்.
சேலத்தில் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொண்ட பாஜக பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஐஜேகே பச்சைமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற படையின் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலத்திற்கு வந்த பிரதமருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பொதுக் கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வெள்ளிக் கிண்ணத்தில் ஜவ்வரிசி நிரப்பப்பட்டு பரிசாக கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், பாஜகவுக்காக நேர்மையாக உழைத்த சேலம் ஆடிட்டர் ரமேஷை சமூக விரோதிகள் அநியாயமாக கொன்றுவிட்டார்கள் என நா தழுதழுக்க பிரதமர் கூறி கண்ணீர் விட்டார்.
பிரதமர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிதான் நாடு முழுவதும் பேச்சாக உள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி விழும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக கூட்டணிக்குதான் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். வெற்றி எண்ணிக்கை 400- ஐ தாண்டுவதே நமது இலக்கு. திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. ஒரு பக்கம் ஊழல் மற்றும் மறுபக்கம் குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது.
கொள்ளையடிப்பதிலேயே திமுக குறியாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கிய பிறகுதான் 5 ஜி தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது. நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக வீணடிக்கிறது. தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுக எப்படியெல்லாம் இழிவு செய்தது. அதிலிருந்தே திமுகவினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜி.கே.மூப்பனார் பிரதமராக வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரை காங்கிரஸ் கட்சி வளர விடவில்லை. நாட்டில் 2 பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்கி வருகிறோம். அதில் ஒன்று தமிழகத்தில் அமைய போகிறது.
சேலத்தின் உருக்கு தொழில் பலனடையும் வகையில் ரூ 6000 கோடியில் ஒரு திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. சேலம் பகுதியில் ரயில்வே கட்டமைப்புக்காக ரூ 260 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த உரையில் திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
ஆடிட்டர் ரமேஷ் கொலை: பாஜக மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் ஆடிட்டர் ரமேஷ். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்த போது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications