Mettur Dam: நடப்பாண்டில் 6ஆவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை! கடல் போல் காட்சி! கண்களுக்கு விருந்து
சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணை 6ஆவது முறையாக நிரம்பியுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இரு அணைகளும் நிரம்பின.

அணைகளின் பாதுகாப்பு கருதி அதிகளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நீர் கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழக காவிரி ஆற்றில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கிறது.
அங்கிருந்து மேட்டூர் அணையை அடைகிறது. நேற்று முன் தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று இரு மடங்கு அதாவது 32 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்தது.
இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் செல்பி எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவின் கபிணி அணையில் இருந்து 8333 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அது போல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 33,670 கனஅடி திறக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு 40 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது நடப்பாண்டில் 6ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியுள்ளது.
இந்த நிலையில் 23,300 கன அடி நீர், டெல்டா, கால்வாய் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த இரு மாதங்களாக தமிழகத்திற்கு கர்நாடகாவின் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தமிழகத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துள்ளோம் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.
ஆனால் கர்நாடகாவில் வெள்ள உபரிநீரை திறந்துவிட்டுவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம் என கர்நாடகா அரசு கணக்கு காட்டுவதாக தமிழக நீர்வளத் துறை குற்றம்சாட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications