காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை.. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து
Recommended Video
சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 8200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை முதல் 8,400 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்கு தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ளதால் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வினாடிக்கு 7,200 கனஅடி வீதம் தண்ணீர் வருவதால், அணையில் இருந்து 6,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும் கபினி அணைக்கு வினாடிக்கு 10,800 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 5,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து காவிரியில் சுமார் 11,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஓகேனக்கல் அருவிக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது
ஒகேனக்கலில் கடந்த 3 நாட்களாக காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடிக்கும் மேல் உள்ளதால் 7-வது நாளாக பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.33 அடியாகவும் அணையின் நீர்இருப்பு 14.99 டிஎம்சியாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர்ந்து சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.