தொடர் சரிவில் மேட்டூர் அணை நீர்மட்டம்.. கருகும் நெற்பயிர்கள்.. விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா?
சேலம்: மேட்டூர் அணையின் நீர் வரத்து 6,428 கன அடியில் இருந்து 3,535 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 6,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருவதால் ஆற்று நீரை நம்பி பாசனம் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போனது. ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. நடப்பாண்டு தமிழ்நாட்டிற்குத் தேவையான காவிரி தண்ணீரை போராடியே பெற வேண்டியுள்ளது.

குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் இருந்தால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 6,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 8,060 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 6,428 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 3,535 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 47.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 16.17 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 100.34 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 23.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,635 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 7,230 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.8 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.62 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,852 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆற்று நீரை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். மேட்டூர் அணை சரிவடைந்து வரும் நிலையில் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும். எனவே குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகிவிடும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications