அமைச்சர் கே.என்.நேருவுக்கு வந்த கோபம்! பந்தல் அமைக்கும் ஊழியருக்கு ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை!
சேலம்: சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு முன்னேற்பாடு பணிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் கே.என்.நேரு, பந்தல் அமைக்கும் ஊழியர் ஒருவரை எல்லோர் முன்னிலையிலும் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முதலமைச்சரை விமர்சிப்பதற்கு ஏற்கனவே என்னடா கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் கே.என்.நேருவின் ஆபாச அர்ச்சனை வீடியோ அல்வா போல் கையில் கிடைத்துள்ளது. அமைச்சராக இருக்கும் ஒருவர் பேசும் பேச்சா இது என சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜக ஐடிவிங் நிர்வாகிகள் கே.என்.நேருவை வறுத்தெடுத்து வருகின்றனர். திமுக இளைஞரணி மாநாடுக்கு இன்னும் ஒன்றரை மாதம் உள்ளது, அப்படியிருக்கையில் நாளையே மாநாடு நடைபெறவிருப்பது போலவும் ஆல்ட்டிரேஷனே செய்ய முடியாது என்பது போலவும் அமைச்சர் நேரு கோபப்பட்டிருக்கவே தேவையில்லை.

என்ன குறைகளோ, மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அதனை பந்தல் அமைப்பாளரை அழைத்து சொல்லிவிட்டால் அதற்கேற்ப மாற்றிக்கொள்ளப் போகிறார்கள். அதைவிடுத்து கட்சிக்காரர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், என எல்லோர் முன்னிலையிலும் மாத ஊதியத்துக்கு வேலை பார்க்கும் பந்தல் அமைக்கும் ஊழியரை இவ்வளவு பெரிய கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கவே தேவையில்லை. அவருக்கும் குடும்பம் உள்ளது பிள்ளைகள் இருக்கிறார்கள், இந்த வீடியோவை பார்த்தால் எவ்வளவு வருந்துவார்கள் என்பதை அமைச்சர் நேரு யோசிக்கவே இல்லை.
அமைச்சர் நேரு மீது எழும் முதல் சர்ச்சையல்ல இது. ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் போட்டோ எடுக்க முயற்சித்த தொண்டரை அடித்து தள்ளிவிட்டது, சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ராஜனை பிரஸ்மீட்டில் அதட்டியது, நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா எம்.பி, இல்லத்தில் தாக்குதல் நடத்திய என இன்னும் பல சர்ச்சைகள் இருக்கின்றன. ஆனாலும் அமைச்சரவையில் மூத்த அமைச்சர் என்பதால் அவராகவே சரி செய்து கொள்வார் என நம்பி அவரிடம் முதல்வர் ஸ்டாலின் இதுவரை கடுமை காட்டியதில்லை.
தலைமையிடம் தனக்கிருக்கும் செல்வாக்கையும், நெருக்கத்தையும் ஓவர் அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டது தான் அமைச்சர் நேருவை இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications