உங்களை நம்பித் தான் நாங்கள்! நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை! திமுக நிர்வாகிகளுக்கு நேரு தந்த பூஸ்ட்
சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் வெற்றிக்கனியை பறித்து முதல்வர் ஸ்டாலின் காலடியில் சமர்பிப்போம் என திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு சூளுரைத்துள்ளார்.
மேலும், உங்களை நம்பித் தான் நாங்கள் என்றும் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை எனவும் பேசி திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் நேரு பூஸ்ட் கொடுத்திருக்கிறார்.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற முடிந்ததாகவும் அடுத்த தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் எனவும் ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே அவரிடம் உறுதி கொடுத்தார்.
இதனால் கீழே அமர்ந்திருந்த தொண்டர்கள் மட்டுமின்றி மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலினும் பூரித்துப் போனார். ஏனெனில் அமைச்சர் நேரு ஒரு உறுதி கொடுக்கிறார் என்றால் அதனை தலையை அடமானம் வைத்தாவது செய்து காட்டுவார் என்பதால் தான். மண்டபத்திற்கு வெளியே 5,000 பேர் கத்திருப்பதாகவும் உள்ளே ஒரு மூன்றாயிரம் பேர் அமர்ந்திருப்பதாகவும் முதல்வரிடம் அமைச்சர் நேரு கூறினார்.
இதனிடையே அமைச்சர் நேரு பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மாலை நாளிதழ் ஒன்றை எடுத்துப் படித்த முதல்வர் ஸ்டாலின், ஏதோ ஒரு பகுதியை மட்டும் சுட்டிக்காட்டி அருகிலிருந்து துரைமுருகனை அழைத்துக் கூறி சிரித்துக் கொண்டிருந்தார்.
அது என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்வதில் மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர். நாளையும் சேலத்தில் முதல்வர் முகாமிடுவதால் கட்சியின் முக்கியப் பிரமுகர்களை சந்திப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications