4 வழிச்சாலைக்காக குடியிருப்பு பகுதிக்குள் கை வைக்க முயன்ற அதிகாரிகள்.. போராட்டத்தில் குதித்த மக்கள்
சேலம்: எடப்பாடி அருகே 4 வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி அமைப்பதற்காக, குடியிருக்கும் வீடுகளை அகற்ற அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி ,கொங்கணாபுரம் வழியாக சேலம் மாவட்டம் ஓமலூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அளவீடு குறியிட்டு வருகின்றனர். இதனிடையே அம்மங்குட்டூர் அருகே சுங்கச்சாவடி அமைப்பதற்கு அதிகாரிகள் அளவீடு செய்த போது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நான்கு வழிச்சாலை அமைக்க, குடியிருப்பு பகுதியில், அளவீடு பணி நடத்துவீர்களா என கேட்டு பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். ஒரு கட்டத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சாலை மறியல் காரணமாக சங்ககிரியில் இருந்து கொங்கணாபுரம் செல்லும் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அதிகாரிகள் மாற்று பாதையில் நெடுஞ்சாலைதிட்டத்தை கொண்டு செல்லாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்பகுதிவாசிகள் எச்சரித்தனர்.
பின்னர் காவல்துறையினர் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது சுங்ககசாவடி அமைக்க குடியிருப்பு பகுதிகளை எடுக்கக்கூடாது. வேறு மாற்று இடத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என மக்கள் உறுதிபட கூறினர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பின், நிலம் அளவீடு செய்யப்படும் என போலீசார் உறுதியளித்ததால், மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்












Click it and Unblock the Notifications