ஜெயக்குமார் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு
சேலம்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது 49 ஆவது வார்டுக்குள்பட்ட தண்டையார்பேட்டையில் ஒரு வாக்குச் சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக ஒரு தகவல் வெளியானது.

இதை தடுத்து நிறுத்திய அமைச்சர் ஜெயக்குமார், கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை பிடித்து அரைநிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து நரேஷின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் மார்ச் 7ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
அவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கோரி நேற்றைய தினம் தமிழகத்தில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், ரோட்டை மறித்தல், கொரோனா நோய் பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, சுந்தர்ராஜன், சித்ரா, ஜெய்சங்கர், நல்லதம்பி உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications