அக்காவுக்கு கல்யாணம்.. ஆசையாக சென்ற தம்பி.. விபத்தில் சிக்கி.. அதை மறைத்து நடந்த திருமணம்.. உருக்கம்
சேலத்தில் பைக் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துவிட்டனர்
சேலம்: அக்காவுக்கு கல்யாணம்.. ஆசை ஆசையாக கல்யாணத்துக்கு சென்று கொண்டிருந்த தம்பி திடீரென விபத்தில் சிக்கி அங்கேயே உயிரிழந்துவிட்டார்.. இறுதியில் தம்பி உயிரிழந்ததை மறைத்துவிட்டு, அக்காவின் திருமணம் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன்.. இவருக்கு 24 வயதாகிறது.. இவரது அக்காவுக்குதான் திருமணம்.. அவர்கள் அனைவரும் மண்டபத்தில் இருந்தனர். தாலி கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.
அக்காவின் கல்யாணத்தில் கலந்து கொள்ளவே ஜெகதீசன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. தன்னுடன் கார்த்திகேயன் 20, பார்த்தசாரதி 20, ஆகிய நண்பர்களையும் கல்யாணத்துக்கு பைக்கில் உட்கார வைத்து ஜெகதீசன் சென்று கொண்டிருந்தார். 3 பேருமே ஒரே பைக்கில்தான் வந்தனர்.

பரிதாப மரணம்
மல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வழிப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது... இந்த விபத்தில் பார்த்தசாரதியும், கார்த்திகேயனும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.. ரத்தம் சொட்ட சொட்ட, பலத்த காயங்களோடு உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெகதீசனை அங்கிருந்தோர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து அனுமதித்தனர்.

முகூர்த்த நேரம்
ஆனால், டாக்டர்கள் எவ்வளவோ போராடியும், ஜெகதீசன் ஆஸ்பத்திரியிலேயே உயிரிழந்தார்... இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இதனிடையே, விபத்தில் 3 பேரும் உயிரிழந்த செய்தியை கேட்டு பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. முகூர்த்த நேரம் நெருங்கி கொண்டே இருக்கும்போதுதான் இந்த தகவல் எட்டியது.

கல்யாணம்
அதனால் அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் விழிபிதுங்கி கதறினர்... இதனால் கல்யாணம் நின்றுவிடுமே என்று நினைத்து, தம்பி இறந்ததையே கல்யாண பெண்ணிற்கும், அவரது பெற்றோருக்கும் விஷயத்தை சொல்லவில்லை.. அதற்குள் குறித்த நேரத்தில் கல்யாணம் முடிந்தது.. அதன்பிறகே அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பி சென்றனர்.

விசாரணை
இந்த விபத்துக்கு காரணம், பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளனர்.. மேலும் ஒரே பைக்கில் 3 பேர் வந்ததால் பேலன்ஸ் இல்லாமல் போயுள்ளது. உயிரிழந்த ஜெகதீஷ் கூலி வேலை செய்பவராம்.. கார்த்திகேயன் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.. பார்த்தசாரதி என்ஜினியரிங் படித்துள்ளார்... இந்த விபத்து சம்பந்தமான விசாரணை நடந்து வருகிறது என்றாலும், தம்பியின் சடலத்தை கண்டு மணப்பெண் கதறி கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது!












Click it and Unblock the Notifications