பாஜக அலுவலகத்தில் கேள்வி கேட்ட பியூஷ் மனுஷ்.. செருப்பால் அடித்த தொண்டர்கள்.. சேலத்தில் பரபரப்பு
சேலத்தில் பியூஷ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
Recommended Video
சேலம்: காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்க.. கழுத்தில் செருப்பு மாலை அணிந்து, பாஜக அலுவலகத்திற்கு சென்ற சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பியூஸ் மனுஷ்... தர்மபுரியின் கஞ்சமலையில், 100 ஏக்கரில், ஒரு லட்சத்தி முப்பதாயிரம் மரக்கன்றுகளை நட்டு ஒரு காட்டையே உருவாக்கியவர்.. இயற்கையை சுரண்டாத வகையிலான தொழில்களை உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டி.. முக்கிய ஏரிகளை கண்டெடுத்து நீர் ஆதாரத்தை பெருக்கியவர்.
விஷ்ணுபிரியா தற்கொலை சம்பவம் முதல், சமுதாயத்தை உலுக்கும் முக்கிய பிரச்சனைகள் வரை கையில் எடுத்து போராடி வருபவர். போராட்டங்கள் காரணமாக பலமுறை சிறைசென்றவர்.. இவை எல்லாம் இருந்தாலும், இவருக்கு ஒரு பக்கம் சோஷியல் மீடியாவில் ஒருசிலரின் எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் நாட்டை பரபரப்புக்கு உள்ளாக்கி வருகிறது. அதனால் இது சம்பந்தமாக பாஜகவிடம் விளக்கம் கேட்க பியூஷ் மனுஷ் முடிவு செய்தார். மேலும், நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்தும் கேள்வி எழுப்ப எண்ணி, இன்று சேலம் பாஜக ஆபீசுக்கு சென்றார். போகும்போது கழுத்தில் செருப்பு மாலையை அணிந்து சென்றுள்ளார்.
அங்கு ஆபீசில் இருந்த நிர்வாகிகளிடம் பல கேள்விகளை இது சம்பந்தமாக கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது ஒரு கட்டத்தில் பாஜகவினர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. விஷயம் பெரிதாகி, போலீஸூக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும், பியூஸ் மனுஷ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பியூஸ் மனுஷ் மயங்கி நின்றார். இதையடுத்து, போலீசார் அவரை பத்திரமாக அழைத்துச்சென்றனர். அவரை அழைத்துப் போகும்போது ஒருவர் தான் போட்டிருந்த செருப்பைக் கழற்றி பியூஷ் தலையில் அடித்ததால் பரபரப்பு கூடியது.