வளைவில் திரும்பிய போது விபரீதம்.. மோதிய பேருந்துகள்.. சேலத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
சேலம்: சேலம் ஓமலூர் அருகே தனியார் ஆம்னி சொகுசு பேருந்தும், ஆன்மீக சுற்றுலா சென்ற மினி பேருந்தும் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து தனியார் சொகுசு பேருந்து கேரளாவை நோக்கி இன்று அதிகாலை சேலம் அருகே சென்று கொண்டிருந்தது. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி நேபாளத்தைச் சேர்ந்த சுற்றுலா மினி பேருந்து ( NPL 9Y 339) சேலம் அருகே வந்து கொண்டிருந்தது.

சேலம் ஒமலூர் அருகே சின்னநடுப்பட்டி பிரிவு சாலையில் நள்ளிரவு சுமார் 1.00 மணி அளவில் நேபாளத்தை சேர்ந்த சுற்றுலா மினி பேருந்தின் ஓட்டுனர், சின்னநடுப்பட்டி காளியம்மன் கோவில் மண்டபத்தில் தங்குவதற்காக பேருந்தை எதிர் சாலைக்கு யூடர்ன் செய்தார். அப்போது பெங்களூரிலிருந்து கேரளா செல்வதற்காக வந்த தனியார் ஆம்னி சொகுசு பேருந்து சுற்றுலா பேருந்தின் நடுப்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்தில் மினி பேருந்து நொருங்கியது. இந்த விபத்தில் மினிபேருந்தில் பயணம் செய்த பீர் பகதூர் ராய், டீக்காரம், புல் ஹரி செளத்திரி, கோபால் தமஸ், போதினி, விஷ்ணு தாங்கல் ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து நடந்த இடத்தில் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபகணிக்கர், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஸ்குமார் மற்றும் ஓமலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
Recommended Video
விபத்து ஏற்பட்டதில் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பின்பு சீர் செய்யப்பட்டது. விபத்து தொடர்பாக ஓமலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications