கட்சியில் ஜனநாயகம் இல்ல..எடுத்தெறிந்து பேசும் சீமான்! நாம் தமிழரில் விழுந்த முக்கிய விக்கெட்.. இவரா?
சேலம்: நாம் தமிழர் கட்சியில் பல நிர்வாகிகள் தலைமை மீதான அதிருப்தியின் காரணமாக விலகி வரும் நிலையில் தற்போது, நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீமானின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், விலகுவதாக அறிவித்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு சொந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நல்ல வாக்கு சதவீதம் கிடைத்ததோடு மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றது. ஆனால் அதற்குப் பிறகாக சீமானின் செயல்பாடுகள் அதல பாதாளத்திற்கு போனதாக கூறுகின்றனர்.
மேலும் சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர். ஏற்கனவே காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் குறித்து சீமான் பேசிய ஆடியோ வெளியிட்ட நிலையில், அவர்களும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இது மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து சீமான் தற்போது முடிவு செய்திருப்பதாகவும், பணம் இருப்பவர்களுக்கே பதவி என்ற நிலைக்கு சீமான் சென்று விட்டதாகவும் குடும்ப அரசியல் செய்வதாக நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சீமானின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், விலகுவதாக அறிவித்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்! இதுநாள் வரையில் என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும்." என கூறியுள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு பேசியபோது கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கூட அழகாபுரம் தங்கம் சீமானின் தீவிர விசுவாசியாகவே இருந்தார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி தொடங்கிய விஜயை மிக கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் விஜய்க்கு எதிரான கடுமையான கருத்துக்களையும் கூறி வந்தவர் தான் இந்த அழகாபுரம் தங்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாகவே சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியில் சாதி அரசியல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் சாதி பார்த்து சீமான் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார். தமிழ் தேசியம் பேசிவிட்டு சாதி அரசியல் செய்வதால் ஏற்கனவே பல மாவட்ட நிர்வாகிகள் விலகி இருக்கின்றனர்.
மேலும் கட்சியில் இருந்தால் இரு இல்லையேல் கட்சியை விட்டுப் போ என பல இடங்களில் சீமான் பேசியிருக்கிறார். மேலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் சீமான் இது போன்ற கருத்தையே முன்வைத்து பேசி வருகிறார். கட்சியில் ஜனநாயகம் இல்லை, குடும்ப அரசியல் தலைதூக்கி இருக்கிறது, சீமானை சுற்றி இருப்பவர்கள் அவரது துதி பாடுவதை மட்டும் தான் விரும்புகிறார். கட்சி குறித்தோ எதிர்காலம் குறித்தோ பேசினால் மூஞ்சியில் அடித்தால் போல் பேசுகிறார்.. இது கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல அதனால்தான் ஏற்கனவே விலகிய மாவட்ட செயலாளர்கள் வரிசையில் அழகாபுரம் தங்கமும் விலகியிருக்கிறார். இந்த பட்டியல் மேலும் நீளும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications