திருப்பூரில் கம்பெனி இருக்கு.. 55 லட்சம் வருமான வரி பாக்கி.. சேலம் தொழிலாளியை ஆடிப்போக வைத்த வங்கி
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு ரூ.54.25 லட்சம் வருமான வரி பாக்கி இருப்பதாகவும், திருப்பூர் நிறுவனம் பெயரில் உள்ளதாக கூறி அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செலவுக்கு நண்பர் அனுப்பிய பணத்தை எடுக்க சென்றவர், வங்கி அதிகாரிகள் கூறிய தகவலால் ஆடிப்போனார். வருமான வரி, ஜிஎஸ்டி பாக்கி என்று தவறுதலாக வங்கி கணக்குகள் முடக்கப்படுவது அண்மைக்காலங்களில் அதிகமாக நடக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த 30 வயதாகும் சிலம்பரசன் என்பவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளி செய்து வருகிறார். இவர், நேற்று அவசர தேவைக்காக தன்னுடைய நண்பரிடம் ரூ.2 ஆயிரம் கேட்டிருக்கிறார். அவருடைய நண்பரும் சிலம்பரசனின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியிருக்கிறார். அந்த பணத்தை எடுப்பதற்காக தீவட்டிப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றிருக்கிறார்..

ஆனால் சிலம்பரசனால் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வங்கி அதிகாரியிடம் ஏன் என்று கேட்டுள்ளார். அதற்கு வங்கி அதிகாரிகள் அளித்த பதிலை கேட்டு சிலம்பரசன் அதிர்ச்சி அடைந்தார். சிலம்பரசன் பெயரில் 54 லட்சத்து 31 ஆயிரத்து 84 ரூபாய் வருமான வரி பாக்கி உள்ளதாகவும், அதனை கட்டாததால் வங்கி கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், எனவே கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது என்றும் வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
அதற்கு சிலம்பரசன், தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறேன்.. அப்படி இருக்கும் போது எனது பெயரில் வருமான வரியா? அப்படி என்றால் என்ன? என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு வங்கி அதிகாரிகள் சிலம்பரசனிடம் சரிவர பதில் அளிக்காமல், நீங்கள் திருப்பூரில் உள்ள குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு சென்றோ அல்லது வருமான வரி அலுவலகம் சென்றோ விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
நான் எதற்கு திருப்பூரும், வருமான வரி அலுவலகமும் செல்ல வேண்டும் என்று கூறுகின்றீர்கள். உங்களது வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். எனக்கு பணம் நீங்கள்தான் தர வேண்டும் என்று சிலம்பரசன் ஆவேசம் அடைந்துள்ளார். மேலும் வங்கி அதிகாரிகளிடம் ஏதோ தவறு நடந்துள்ளது. அதனை சரி செய்து எனது கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அனுமதியுங்கள் என்று கோரிக்கை வைத்தார்
ஆனால் வங்கி அதிகாரிகளோ சிலம்பரசனிடம் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறியுள்ளனர். இதனால் 2 ஆயிரம் ரூபாயை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சிலம்பரசன் என்ன செய்வது என்று தெரியாமல் கவலையில் உள்ளார். இந்த விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குளறுபடியை சரிசெய்ய வேண்டும் என்று சிலம்பரசன் வலியுறுத்தினார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஒரு பிரச்சனை இதேபோல் வந்தது. வேலை தேடிக் கொண்டிருந்த வேலூர் இளைஞருக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யும்படி எஸ்எம்எஸ் வந்துள்ளது.அத்துடன் ரூ.3.5 கோடி ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும் நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த இளைஞர் புகாரும் அப்போது அளித்தார் . அவது பான் கார்டு எண்ணை கொண்டு என்.எம்.என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் துடியலூர், கோவை என்ற முகவரியில் இயங்கியது. வரி ஏய்ப்பு மோசடி புகாரில் அந்த இளைஞர் பெரும் சிக்கலை அனுபவித்தார்.அப்பாவி இளைஞர்களின் பான் கார்டு, ஆதார் விவரங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications