கடும் எதிர்ப்பு.. கறுப்பு நிற ஆடை அணியக்கூடாது என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றது சேலம் பெரியார் பல்கலை!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவின்போது நாளை கறுப்பு உடை அணிந்து வரவேண்டாம் என்ற பல்கலைக்கழக பதிவாளரின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்க உள்ளார். இதனிடையே, இந்த நிகழ்ச்சியின் போது ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்கு திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதனம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இது பெரும் சர்ச்சையாகவும் வெடித்து வருகிறது. ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவின் காரணமாக சேலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் அறிவுறுத்தலின்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வரவேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பினார்.
இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை இன்று அனுப்பியுள்ளார். அதில், "பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் அனைவரும் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வர வேண்டும்.

மேலும், செல்போன்கள் எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். சேலம் மாவட்ட காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி இது கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கறுப்பு உடை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்நிலையில், கறுப்பு உடை அணிந்து வரக் கூடாது என்ற பெரியார் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றொரின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "சேலம் மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தலின்படி, பட்டமளிப்பு விழாவில் கறுப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications