சேலத்தில் ஷாக்! விளையாட்டாக பாம்பு பிடிக்க முயன்ற இளைஞர்.. கட்டை விரலில் விஷம் ஏறி பலி!
சேலம்: வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை விளையாட்டாக பிடிக்க முயன்ற இளைஞர், பாம்பு கடித்ததில் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இளைஞர் ஒருவர் நேற்றிரவு தனது வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் இளைஞர் இதற்கு முன்னர் பாம்புகளை பிடித்தது கிடையாது. எனவே அனுபவமில்லாத அவர், விளையாட்டுதனமாக பாம்பை பிடித்திருக்கிறார். சிறிய பாம்பு என்பதால் விஷம் குறைவாக இருக்கும் என்று நினைத்து பிடித்திருக்கிறார்.

ஆனால் பிடித்த உடனேயே இளைஞரின் கட்டை விரலை பாம்பு கடித்திருக்கிறது. இருப்பினும், சினிமாக்களில் வருவதை போல கையில் துணியை கட்டிக்கொண்டு பாம்பை மீண்டும் பிடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக இருக்கிறது. இதனையடுத்து வேறுவழியின்றி அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இளைஞர் சுய நினைவை இழந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இளைஞர் பிடிக்க முயன்றது நல்லபாம்பு என தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக இந்தியாவில் மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருப்பது நான்கு வகை பாம்புகள்தான்.
1. நாகப்பாம்பு (நல்ல பாம்பு)
2. கண்ணாடி விரியன்
3. சுருட்டை விரியன்
4. கட்டு விரியன்
இதில் நாகப்பாம்பு (நல்ல பாம்பு) கடித்து ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம். இந்த வகை பாம்புகளை எளிதாக அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். அது ஆக்ரோஷமாக இருக்கும்போது படமெடுத்து ஆடும். அதன் தலைக்கு பின்புறம் U வடிவத்தில் அடையாளம் இருக்கும். இதுவே நாகபாம்பு மற்ற பாம்புகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இந்த பாம்புகள் வழக்கமாக 1-1.5 மீட்டர் நீளம் வரை வளரும். சில வகை பாம்புகள் 2 மீட்டருக்கும் மேல் வளரும். பலரும் இந்த பாம்புகள் பழுப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
ஆனால் மஞ்சள், பழுப்பு, கருப்பு அல்லது சாம்பல் சில நேரங்களில் வெள்ளை நிறத்தில் கூட இந்த பாம்புகள் இருக்கலாம். வாழ்விடத்தை பொறுத்து நிறம் மாறும். எனவே இந்த வகை பாம்புகளை அதன் தலைக்கு பின்புறம் இருக்கும் U வடிவ அடையாளத்தை வைத்து கண்டுக்கொள்ள வேண்டும். மற்ற பாம்புகளை போல இது இரவில் மட்டும் வேட்டையாடாது. பகல் பொழுதில் கூட சுறுசுறுப்பாக இயங்கும். மனிதர்களை கடிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும்.
அதேபோல இந்த பாம்புகளின் உணவு பட்டியலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வழக்கமாக மற்ற பாம்புகளை போல எலிகளையும், தவளைகளையும் அதிகம் வேட்டையாடினாலும், வாய்ப்பு கிடைக்கும்போது இது சாரை உள்ளிட்ட பாம்புகளையும் வேட்டையாடி உணவாக எடுத்துக்கொள்ளும்.
நாகபாம்பின் விஷயம் 'நியூரோடாக்சின்' வகையை சேர்ந்தது. அதாவது இது நேரடியாக மனிதனின் நரம்பு மண்டலத்தை தாக்கும். இப்படி நடக்கும்போது உடல் உறுப்புகளுக்கு நரம்புகள் அனுப்பும் சிக்னல் தடைபட்டு, உறுப்புகள் செயலிழக்க தொடங்கும். பின்னர் பக்கவாதம் ஏற்படும். கடித்த இடத்தில் கடுமையான வலி இருக்கும். கடிபட்ட இடம் கொஞ்சம் கொஞ்சமாக வீங்க தொடங்கும். கண் இமைகள் கடுமையாக சோர்வடையும். பிறகு பார்வை மங்கி, பேச்சு தடுமாறி, எச்சில் விழுங்குவதற்கு கூட சிரமம் ஏற்படும்.
இறுதியாக நுரையீரலை விஷம் தாக்கும்போது, நுரையீரல் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும். பின்னர் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
மருத்துவமனைகள் நல்ல பாம்பின் விஷத்தை எதிர்கொள்ள 'பாலிவலன்ட் ஆன்டிவெனின்' எனும் விஷ முறிவு மருந்தை பயன்படுத்துகின்றன. இது விஷத்தின் மூலக்கூறுகளுடன் இணைந்து, அதன் வீரியத்தை குறைக்கிறது. இருப்பினும் கடிபட்ட உடனே இதை கொடுக்க வேண்டும். இல்லையெனில் பலன் இருக்காது.












Click it and Unblock the Notifications