இது என்ன பிசு பிசுனு வருது.. கெட்டுப்போன உணவு விற்ற சேலம் தியேட்டர்.. சீல் வைத்த அதிகாரிகள்
சேலம்: வீக் எண்ட்களில் சினிமா தியேட்டர்களுக்கும், உணவகங்களுக்கு செல்வதும்தான் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. சேலம் ஆத்தூரில் பத்மாலயா என்கிற சினிமா தியேட்டரில் கெட்டுப்போன பப்ஸ் விற்கப்பட்டது. உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த தியேட்டருக்கு சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பத்மாலயா தியேட்டர் உள்ளது. இங்கு இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில், அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து படம் வெளியாகியுள்ளது. ஆத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெய்குமார் லப்பர் பந்து படம் பார்ப்பதற்காக பத்மாலயா தியேட்டர் சென்றுள்ளார். இடைவெளியின்போது ஜெய்குமார் அங்குள்ள கேன்டீனில் பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அப்போது அந்த பப்ஸ் காலாவதி ஆகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தியேட்டர் நிர்வாகத்தினரிடம் கேள்வி எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜெய்குமார், இது எக்ஸ்பைரி ஆகிடுச்சு. பப்ஸ் சாப்பிட்டால் ஸ்மெல் அடிக்குது. பிசுபிசுனு இருக்கு. மக்களுக்கு எப்படி கெட்டுப்போனதை எல்லாம் விற்கறீங்க. கெட்டுப் போனதையே சூடு செஞ்சு கொடுத்து ஏமாத்திட்டு இருக்கீங்க. என்எஸ் தியேட்டரும், பத்மாலயா தியேட்டரும் இதே வேலையை தொடர்ந்துட்டு இருக்கீங்க. நான் முதல்ல வாங்கி சாப்பிட்ட பப்ஸ் ஸ்மெல் அடிச்சதால தூக்கி வீசிட்டேன்.
செக் பண்றதுக்காக திருப்பியும் இன்னொரு பப்ஸ் வாங்கினேன். இதுவும் அப்படிதான் இருக்கு. மக்களுக்கு எப்படி கெட்டுப்போனதை விற்கலாம். இதை 30 ரூபாய்க்கு விக்கறீங்க. உருளைக்கிழங்கு கெட்டுப்போனது கூட தெரியாதா. உருளைக்கிழங்கு எல்லாம் ஒரு நாளுக்கு தான் வரும். இதை எத்தனை நாளா வெச்சு வித்துட்டு இருக்கீங்க. என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தியேட்டர் ஊழியர், மதியம் தான் சார் வாங்கினோம். இனிமேல் இந்த தப்பு நடக்காது. என்று கூறினார். அதை ஏற்காத ஜெய்குமார், இன்னைக்கு வாங்கின பப்ஸ் எப்படி கெட்டுப் போகும். செக் பண்ணுவோமா. நீங்க எங்க இருந்து பப்ஸ் வாங்குறீங்க. அவங்களை இங்க வர சொல்லுங்க. என்று கூறினார்.
இதுகுறித்து ஜெய்குமார் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தியேட்டரில் ஆய்வு செய்தனர். இதில் காலாவதியான உணவுகள் விற்றது உறுதியானது. இதையடுத்து காலாவதியான உணவுகளை பறிமுதல் செய்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பத்மாலயா தியேட்டருக்கு சீல் வைத்தனர். மேலும் தியேட்டர் உரிமையாளர் குணசேகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. மேலும் தியேட்டர் நிர்வாகத்திடம் கெட்டுப் போன உணவுடன் ஜெய்குமார் விவாதித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற சம்பவம் நடப்பது முதல்முறை அல்ல. அதுவும் சேலம் மாவட்ட திரையரங்குகளில் தரமான உணவுகள் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற புகார் தொடர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலத்திலும், இந்தியன் 2 படம் வெளியானபோது சென்னையில் உள்ள தியேட்டரிலும் கெட்டுபோன உணவு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
தற்போது கெட்டுப்போன உணவுகளை விற்ற எஸ்.எஸ் பிரியாணி உள்ளிட்ட ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தியேட்டர்களிலும் சோதனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications