சேலம் ஏற்காடு காதலிகள் விவகாரம்.. காதலனுக்காக மதம் மாறிய லோகநாயகி.. இறுதியில் நடந்தது என்ன?
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் உள்ளது. இதன் அருகே 20 அடி பள்ளத்தில் மீட்கப்பட்ட இளம் பெண் லோகநாயகி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது காதலன் அப்துல்ஹபீஸ் கூறியபடி அவரை திருமணம் செய்துகொள்ள லோகநாயகி தனது பெயரை அல்பியா என்று மாற்றி முஸ்லிம் மதத்திற்கு மாறியதாக தகவவல்கள் வெளியாகி உள்ளது. காதலன் மற்றும் உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் கூறிய தகவல்களை பார்ப்போம்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் பகுதியில் உள்ள 20 அடி பள்ளத்தில் நேற்றுமுன்தினம் இளம் பெண் ஒருவரின் உடல் கிடப்பதாக ஏற்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து வந்துஅந்த பெண்ணின் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த உடலின் அருகே கிடந்த ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றிய ஏற்காடு போலீசார், அவர் யார் என்று விசாரிக்க தொடங்கினார்கள். முதற்கட்ட விசாரணையில் சேலத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியவர் என்பதும், அந்த பெண் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய மகள் லோகநாயகி என்ற அல்பியா (வயது 35) என்றும் தெரியவந்தது. அவர் காணாமல் போனது குறித்து அந்த விடுதி காப்பாளர் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் ஏற்காடு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அப்துல் ஹபீஸ் கைது
லோகநாயகி என்ற அல்பியா கடைசியாக பெரம்பலூரைச் சேர்ந்த அமானுல்லா என்பவருடைய மகன் அப்துல் ஹபீஸ் (22) என்பவருடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. ஹபீஸ் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார் என்பதை அறிந்த போலீசார், உடனடியாக அவரை தேடி சென்று பிடித்து விசாரித்தனர்.
மருத்துவ மாணவி காதலி
அவரிடம் நடத்திய விசாரணையில் லோகநாயகி என்ற அல்பியா கொல்லப்பட்டது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணை தகவலின்படி, திருச்சி மாவட்டம், துறையூர் கரைமேடு செங்காட்டப்பட்டி செட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகளான 21 வயதாகும் மோனிஷா என்பவரை அப்துல் ஹபீஸ் முதலில் காதலித்து வந்தாராம். மோனிஷா விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
ஆசிரியை காதலி
இதனிடையே இந்த காதல் ஒருபுறம் எனில் லோகநாயகியின் அறிமுகம் அப்துல் ஹபீசுக்கு கிடைத்ததாம். அதாவது லோகநாயகி ஆசிரியைக்கு படித்து வந்திருக்கிறார். அவருடைய அக்காள் வீடு பெரம்பலூரில் உள்ளது. அவரை பார்க்க செல்லும்போது இவருக்கும், மாணவர் அப்துல்ஹபீசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாம். அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்தார்களாம்.

சேலம் மகளிர் விடுதி
இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் சேலம் புதிய பஸ் பேருந்து நிலையத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி தனியார் இன்ஸ்டிடியூட் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு லோகநாயகி ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வந்தாராம். இதனால் அப்துல் ஹபீஸ் அவ்வப்போது சேலம் வந்து அவரை சந்தித்து காதலை வளர்த்து வந்தாராம்
சென்னை காதலி
இந்த நிலையில் அப்துல் ஹபீஸ் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும், ஆவடி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த தாவிய சுல்தானா (22) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினாராம்.இந்த காதல் விவகாரம் ஒரு கட்டத்தில் லோகநாயகிக்கு தெரியவந்தது. உடனே அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்துல் ஹபீசிடம் வற்புறுத்த தொடங்கினாராம்.. மேலும் லோகநாயகி சமீபத்தில் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளாராம்.
திருமணம் செய்ய வற்புறுத்தல்
இதை அறிந்த அப்துல் ஹபீஸ் சேலம் வந்து காதலி லோகநாயகியை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது. . தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் லோகநாயகியை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினாராம். இதற்காக தற்போதைய காதலி தாவிய சுல்தானா, ஏற்கனவே காதலித்த மருத்துவ மாணவி மோனிஷா ஆகியோரிடம் அப்துல் ஹபீஸ் உதவி கேட்டாராம்.
பொய்யான கதை
அதுவும் எப்படி என்றால். அவருடைய உறவினர் பெண்ணின் அண்ணனை லோகநாயகி திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை பாட்டிலால் அடித்து கொன்று விட்டாள் என்ற பொய்யான கதையை கூறி, இதற்கு பழி வாங்குவதற்காக உதவி செய்ய வேண்டும் என்று கூறினாராம். டாக்டருக்கு படிப்பதால், மோனிஷாவை மயக்க மருந்துடன், ஊசியை எடுத்து தருமாறு உதவி கேட்டாராம்.

சேலம் ஏற்காடு பிளான்
அதன்படி கடந்த பிப்ரவரி 1-ந்தேதி அப்துல் ஹபீஸ் மற்றும் காதலிகள் சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் டிரைவர் இல்லாமல் ஒரு வாடகை காரை எடுத்துக் கொண்டனர். காரை அப்துல் ஹபீஸ் ஓட்டினார். லோகநாயகியை தொடர்பு கொண்டு தங்கும் விடுதியில் இருந்து வரவழைத்து காரில் ஏற்றிக்கொண்டு ஏற்காடு சென்றார்களாம்.
மயக்க ஊசி
வழியில் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே காதலிகளுடன் அவர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். லோகநாயகியின் காயங்கள் உடனடியாக ஆறுவதற்கு மருந்து செலுத்துவதாக கூறி மோனிஷா மூலம் அதிக வீரியம் கொண்ட மயக்க மருந்தை லோகநாயகிக்கு செலுத்த வைத்தாராம் அப்துல ஹபீஸ். இதில் லோகநாயகி மயங்கி விழுந்த நிலையில், லோகநாயகியை மலைப்பாதையில் தள்ளிவிட்டு விட்டு சென்றுவிட்டார்களாம்.. இந்த தகவலை போலீசாரிடம் அப்துல் ஹபீஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மதம் மாறினார்
முன்னதாக அப்துல்ஹபீஸ் கூறியபடி அவரை திருமணம் செய்துகொள்ள லோகநாயகி என்ற பெயரை அல்பியா என்று மாற்றி முஸ்லிம் மதத்திற்கு அவர் மாறியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த விவகாரத்தில் அப்துல் ஹபீஸ், அவருடைய தோழிகள் மோனிஷா, தாவிய சுல்தானா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications