ஒரு டீச்சர் செய்ற வேலையா இது.. கிச்சனுக்குள் ஓடிச்சென்று.. வாயடைத்து போன வாழப்பாடி..!
வாழப்பாடியில் கணவனை கொன்ற மனைவி கைதாகி உள்ளார்
சேலம்: ஒரு டீச்சர் செய்யக்கூடிய காரியமா இது என்று வாழப்பாடி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. இப்போது டீச்சரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி என்ற கிராமம் உள்ளது.. அந்த கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. 35 வயதாகிறது.. இவருடைய மனைவி பெயர் இளமதி.. 30 வயதாகிறது.
இவர்களுக்கு 10 வயதில் தக்சிந்த் என்ற மகனும், அக்சிதா என்ற 6 வயது மகளும் உள்ளனர்.. வி.மன்னார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தவர் இளமதி.

தகராறு
மணிகண்டன் தினமும் தண்ணி அடிப்பாராம்.. தண்ணி அடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து தகராறும் செய்வாராம்.. அப்படித்தான் நேற்றும் தகராறு செய்துள்ளார்.. ஒருகட்டத்தில் இளமதியை தாறுமாறாக, அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டார்.. வலிபொறுக்க முடியாமல் இளமதி கதறி உள்ளார்..

உருட்டுக்கட்டை
பிறகு பொறுமை இழந்தநிலையில், இளமதி நேராக கிச்சனுக்கு சென்று, ஒருபெரிய உருட்டுக்கட்டையை எடுத்து வந்து மணிகண்டனை பதிலுக்கு தாக்கிவிட்டாராம்.. இதில், மணிகண்டனுக்கு மண்டை பிளந்து ரத்தம் கொட்டி உள்ளது. அப்படியே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தும் போய்விட்டார்..

விசாரணை
இந்த கொலை குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் டீச்சர் இளமதியிடம் விசாரணை நடத்தினர்... அந்த விசாரணையில்தான் தெரியவந்தது, மணிகண்டன் எம்ஃபில் பட்டதாரியாம்.. டீச்சர் பிஎட் பட்டதாரி.. 2 பேரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.. பக்கத்து பக்கத்து ஊர்.. ஆனால் ஒரே காலேஜில் படிக்கும்போது லவ் வந்துள்ளது.. 2 பேர் வீட்டிலும் எதிர்ப்பு.. அதனால், வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துள்ளனர்..

கைது
ஆரம்பத்தில் சென்னையில் அரசு பூம்புகார் நிறுவனத்தில்தான் மணிகண்டனுக்கு வேலை கிடைத்திருக்கிறது.. ஆனால், அந்த ஆபீசில் ஏதோ பிரச்சனை காரணமாக மணிகண்டன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்... இதனால்தான் தினமும் குடிப்பது ஆரம்பமாகி உள்ளது.. அந்த எரிச்சலையும், கோபத்தையும் மனைவி மீது காட்டி வந்துள்ளார்.. நேற்று சாயங்காலம் இந்த தகராறு அத்துமீறவும்தான், இளமதி அவரை அடித்து தாக்கியதாக தெரிகிறது. டீச்சரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications