சேலம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இரண்டாவது ரயில்வே மேம்பாலம் குறித்து அதிகாரிகள் தகவல்
சேலம்: சேலம் மாநகரின் மைய பகுதியான முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் ரெயில் கடந்து செல்லும்போது இருபுறங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் செரிரோட்டில் ரூ.130 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இந்நிலையில் முள்ளுவாடி கேட் மற்றொரு வழிப்பாதையான பிரட்ஸ் ரோட்டிலும் புதிய ரெயில்வே மேம்பாலம் ரூ.72 கோடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
சேலம் மாநகரின் மைய பகுதி என்றால் அது முள்ளுவாடி ரெயில்வே கேட் பகுதி தான். இந்த பகுதியில் எப்போதும் ரயில்கள் கடந்து செல்வதன் காரணமாக சாலையின் இருபுறங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கை. இதனை கட்டுப்படுத்தும் வகையில் செரிரோட்டில் ரூ.130 கோடியில் ஏற்கனவே ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கடந்த ஆண்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பாலம் திறந்த பிறகு அஸ்தம்பட்டியில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி செல்லும் பஸ்கள் அனைத்தும் ரயில்வே மேம்பாலம் வழியாக எளிதாக செல்கின்றன.

இந்நிலையில், முள்ளுவாடி கேட் மற்றொரு வழிப்பாதையான பிரட்ஸ் ரோட்டிலும் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதற்கு அனுமதி அளித்த அரசு, பாலம் கட்ட கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதன்படி முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் சாலையோரம் உள்ள வீடுகள், கடைகளின் ஒரு பகுதி மட்டும் இடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகையும் அரசால் வழங்கப்பட்டது. இதுதவிர, தொங்கும் பூங்காவில் இருந்து முள்ளுவாடி கேட் மற்றும் மேம்பாலம் முடியும் வரையிலும் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள். தற்போது எல்லா பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில் முள்ளுவாடி கேட்டில் 2-வது ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 2-வது புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை அடுத்த மாதம் நடைபெறும். இந்த மேம்பாலம் கட்டுவதற்காக பிரட்ஸ் ரோட்டில் வீடுகள், வணிக நிறுவனங்களின் கடைகளின் ஒருபகுதி இடித்து அகற்றப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பகுதியில் பாலம் கட்டுவதற்கு இடையூறாக உள்ள மரங்களும் வெட்டி அகற்றப்பட்டுவிட்டன.
எனவே முள்ளுவாடியில் மிக விரைவில் இரண்டாவதாக புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்படும். ஆனால் ஆரம்பிக்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை.. முள்ளுவாடி கேட்டில். முதலில் ரயில்வே துறை சார்பில் மேம்பாலமும், அதன்பிறகு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இணைப்பு மேம்பாலமும் கட்டப்படும். இந்த ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில் இனிமேல் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலே ஏற்படாது என்றார்கள்.












Click it and Unblock the Notifications