25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வாய்ப்பு.. சேலத்தில் களமிறங்கும் செல்வகணபதி! அதிமுகவுக்கு செக்?
சேலம்: லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது. சேலத்தில் செல்வகணபதி போட்டியிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் இவர் மீண்டும் எம்பி தேர்தலில் களமிறங்குவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை போலவே, இந்த ஆண்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில், ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து தற்போது அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. திமுகவை பொறுத்த அளவில்,

1 ) வடசென்னை - கலாநிதி வீராசாமி
2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்
5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6) வேலூர் - கதிர் ஆனந்த்
7 ) தருமபுரி - அ.மணி
8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
9 ) சேலம் - செல்வ கணபதி
10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்
11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா
12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
13 ) கோவை - கணபதி ராஜ்குமார்
14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி
15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்
17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
18 ) பெரம்பலூர் - அருண் நேரு
19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்
20 ) ஈரோடு - பிரகாஷ்
21 ) ஆரணி - தரணி வேந்தன்
என 21 தொகுதிகளில் களம் காண்கிறது. இதில், சேலத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வகணபதி மீண்டும் எம்பி தேர்தலில் போட்டியிடுகிறார். பொதுவாக கொங்கு மண்டலம் என்பது திமுகவுக்கு கொஞ்சம் சவாலான இடங்களாகவே கருதப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையிலும் கூட கொங்கு மண்டலங்களில் பெரியதாக காலூன்ற முடியவில்லை. எனவே, இதை கருத்தில் கொண்டு கட்சி பீல்டு வொர்க் செய்தது.
இதன் விளைவாக, கடந்த ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணியில் நின்று போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை மேலும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி சேலம் தொகுதியில் செல்வகணபதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இங்கு சிட்டிங் எம்பி பார்த்திபன் இருக்கிறார். இவரை மீறி, செல்வகணபதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கே.என்.நேருவின் செல்வாக்குதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதிலும், சேலம் இளைஞரணி மாநாட்டு பணிகளில் செல்வகணபதியின் பங்கு குறிப்பிட்ட அளவு இருந்ததால்தான் இவரது பெயர் 'ஓகே' ஆகியுள்ளது என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
செல்வகணபதியை பொறுத்த அளவில், இவருக்கு முதல் அரசியல் வாய்ப்பு நாமக்கல் மாவட்டத்திலிருந்தான் கிடைத்தது. 1991ல் எம்எல்ஏவாக தேர்வான அவர், 1991-1996 வரை ஜெயலலிதா ஆட்சியின் கீழ் உள்ளூராட்சி நிர்வாக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் 1999ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் சேலம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 2008வரை அதிமுகவுக்கும், இவருக்குமான உறவு நீடித்தது. அதன் பின்னர் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்த பின்னர் ஏராளமான வழக்குகள் இவர் மீது பதியப்பட்டன. 2010ல் மாநிலங்களவை உறுப்பினரான அவர் மீது சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தண்டனையும் வழங்கப்பட்டது. எனவே, இவரது மாநிலங்களவை பதவி பறிபோனது.
இப்படியாக ஏராளமான இடர்பாடுகள் வந்தாலும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அரசியல் செய்வதில் இவரை விட்டால் வேறு பொறுத்தமான ஆள் கிடையாது. எனவே, இதனை மனதில் வைத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் லோக்சபா தேர்தலில் நிற்பதற்கு திமுக தலைமை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இந்த தேர்வு, அதிமுகவுக்கான செக் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications