சேலம் தொகுதி எம்.பி. சீட்! கே.என்.நேருவை மலைபோல் நம்பும் செல்வகணபதி! உதயநிதி சாய்ஸ் யார்?
சேலம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டும் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, கே.என்.நேரு தனக்காக தலைமையிடம் பரிந்து பேசுவார் என எதிர்பார்க்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழுமையாக இன்னும் 3 மாதங்கள் கூட இல்லாததால் அது தொடர்பான பரபரப்பு இப்போதே பற்றிக்கொண்டது.நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக தீயாய் வேலை செய்து வருகிறது.தொகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தும் திமுக வேட்பாளர் தேர்விலும் சத்தமின்றி ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறது.

இந்நிலையில் சேலம் தொகுதியில் செல்வகணபதிக்கு போட்டியாக சிட்டிங் எம்.பி.யான பார்த்திபன், வீரபாண்டி ஆறுமுகத்தின் இளையமகன் டாக்டர் பிரபு, ராஜா தமிழ்மாறன் உள்ளிட்ட இன்னும் ஓரிரு முக்கிய பிரமுகர்களும் எம்.பி. சீட்டை எதிர்பார்ப்பதால், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு யாருக்காக தலைமையிடம் பரிந்துரைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தன் மீதான வழக்குகளில் இருந்து விடுபட்டிருப்பதால் இப்போது ரிலாக்ஸ் ஆக இருக்கும் செல்வகணபதி, மீண்டும் தேர்தல் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளார். செல்வகணபதியை பொறுத்தவரை 1991-1996 அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்து சுடுகாடு கூரை ஊழல் வழக்கில் சிக்கியவர்.
இவருக்கும் இப்போது இருக்கும் ப்ளஸ் பாயிண்ட் என்று பார்த்தால், எடப்பாடி பழனிசாமியை நேரடியாக எதிர்த்து சேலம் மாவட்டத்தில் துணிச்சலாக அரசியல் செய்வதும், திமுக இளைஞரணி மாநாடுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பை கொட்டியதும் தான். இதனால் தான் இவரது பெயரும் வேட்பாளர் விவகாரத்தில் அடிபடுகிறது.
இதனிடையே வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய ரோல் வகிப்பார் என்பதால் அவரது சாய்ஸ் யாரோ அந்த நபருக்கு தான் சீட் கிடைக்கக் கூடும். சேலம் திமுக இளைஞரணி மாநாடுக்கு யார் யார் கடுமையாக உழைத்தார்கள் என்பதை அவரறிந்து வைத்திருப்பதால் அதற்கேற்ப செலக்ஷன் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications