டிக்-டாக் வீடியோவில் சேலம் கலெக்டர் ரோகிணியின் விதவித போட்டோக்கள்.. போலீசார் தீவிர விசாரணை
சேலம் கலெக்டர் ரோகிணியின் போட்டோக்களுடன் டிக்டாக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியின் போட்டோவை வைத்து, 'டிக்டாக்' வீடியோ பதிவிட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து 'சைபர் கிரைம்' போலீசார் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக டிக்-டாக் ஆப்பில் சில இளைஞர்கள் ஆர்வ கோளாறு காரணமாக வீடியோக்களை பதிவிட்டு விட்டாலும், மேலும் சிலர் வேண்டுமென்றே இந்த டிக்-டாக் ஆப்பை தவறாக பயன்படுத்தி வருவதால் இவர்கள் மீது அவ்வப்போது போலீசார் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.
மகனின் படங்கள்
இந்நிலையில், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியின் படங்களை வைத்து வீடியோ ஒன்று வெளியானது. இதில் கலெக்டர் படங்களுடன் பின்னணியில் சில சினிமா பாட்டுக்களும் பதிவிடப்பட்டுள்ளது. கலெக்டரின் விதவித படங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மகனின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
சைபர் கிரைம்
இந்த வீடியோவை டிக்டாக் ஆப் மட்டுமின்றி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என எல்லா சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த காரியத்தை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ வைரலாகி ஒரு வாரம் கழித்துதான் கலெக்டர் ரோகிணிக்கு விஷயமே தெரியவந்தது. அதன்பிறகுதான் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர், சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தெரிவித்து உள்ளார்.
விரைவில் கைது
கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள, 'டிக்டாக்' மியூசிக்கை தடை செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் வீடியோ வெளியிட்ட மர்மநபர்களை கைது செய்வோம் என்றும் சைபர் கிரைம் போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடும் அதிர்ச்சி
இந்த டிக்டாக் ஆப்பை தடை செய்ய செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கலெக்டரின் படத்தையே பயன்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.