பெரியார் குறித்து அவதூறு பேச்சு.. ரஜினிக்கு தினகரன் கண்டனம்
சேலம்: தமிழருவி மணியன் போன்றோரிடம் விவரம் கேட்டுவிட்டு ரஜினிகாந்த் பேசியிருக்க வேண்டும் என ஆர் கே நகர் எம்எல்ஏவும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் சேலத்தில் பெரியார் கலந்து கொண்ட மாநாடு குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் உண்மைக்கு புறம்பாகவும் பேசியதாக திராவிடர் கழகத்தினரும் பெரியார் இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் நெத்திமேட்டில் கட்சி நிர்வாகியின் மகன் மறைவுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

போராளி
அப்போது அவர் கூறுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார். தந்தை பெரியார் என்பவர் ஒரு சமூக நீதிப் போராளி. ஜாதியை எதிர்த்துப் போராடியவர். சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்துப் போராடியவர். பெண்களின் கல்வி, உரிமைகளுக்காகப் போராடியவர்.

ஆட்சி, அதிகாரம்
இன்னும் அவரை பற்றி எத்தனையோ சொல்லலாம். அத்தனை பெருமைக்குரியவர். ஆட்சி அதிகாரத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமுதாயம் மேம்பட வேண்டும் என்பதற்காக தனது இறுதி மூச்சு வரை போராடியவர். அவர் பன்முகத் தன்மை உடையவர். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் கூட யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு உதாரண புருஷராக, தலைவராக இருந்தார். எல்லோராலும் மதிக்கப்பட கூடியவர்.

மாபெரும் தலைவர்
அவரை பற்றி பேசும்போது தவறான தகவல்களின் அடிப்படையில், உண்மைக்குப் புறம்பான தகவல்களின் அடிப்படையில் ரஜினிகாந்த் பேசியது வருத்தமளிக்கிறது, கண்டனத்துக்குரியது. தந்தை பெரியார் என்பவர் தனிநபர் அல்ல. அவர் மாபெரும் இயக்கம். தமிழக மக்களுக்காக, தமிழர் நலனுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத போராடிய அந்த மாபெரும் தலைவரை பற்றி அந்த விழாவில் ரஜினி பேசியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.

உண்மை
முக்கியத் தலைவர்கள் குறித்த கருத்துகளை வெளியிடுவதற்கு முன்பு யோசித்து பல பேரிடம் அதுகுறித்து உண்மைத் தகவல்களை கேட்டறிந்து அவர் பேசியிருக்கலாம். 40 ஆண்டுகால முன்னணி நடிகர் இந்த வரலாற்று பதிவுகள் குறித்து அவருடன் இருக்கும் அவரது ஆலோசகர் தமிழருவி மணியனிடம் கேட்டிருந்தாலே உண்மை தெரிந்திருக்கும். எனவே இது போன்ற கருத்துகள் கண்டனத்துக்குரியது என்றார் தினகரன்.












Click it and Unblock the Notifications