டிஜிபி எங்க சார் போனாரு? குற்றங்களை லிஸ்ட் போட்ட விஜய்! சட்டென இதை மறந்துட்டாரே!
சேலம்: தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டிருப்பது எதிர்க்கட்சிகளிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொறுப்பு அதிகாரிகளால் குற்றம் அதிகம் நடக்கிறது என்று விமர்சித்திருந்தார்.
ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நீண்ட காலமாக பொறுப்பு டிஜிபிதான் இருக்கிறார். இந்த பாஜகவுடன்தான் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. விமர்சனம் என்று வந்துவிட்டால் ஏன் பாஜகவை ஒதுக்கி வைத்துவிட்டு திமுகவை மட்டும் டார்கெட் செய்கிறார் விஜய் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாக்குறுதிகளும் திமுகவும்
சேலத்தில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் பேசியதாவது, "ஆட்சிக்கு வந்த அடுத்த வருடம் அதாவது, 2022 ஆம் ஆண்டு 70% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று திமுக கூறியது. கடந்த வருடம் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக திமுக சொன்னது. இந்த ஆண்டு 85% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக சொல்கிறார்கள்.
ஸ்டாலின் மீது அட்டாக்
மொத்தம் 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார்கள். முதலில் 70% பின்னர் 90% இப்போது 85%! தேர்தல் நெருங்க நெருங்க 60%, 50%, 40%, 30%, 20% என குறைந்து கொண்டே வரும். இதை கூட முதலமைச்சரே அறிவிப்பார். அவருடைய ஸ்டைலில் இதைப் பற்றி விமர்சிக்க வேண்டும் எனில், பொய்யில் பிறந்து, பொய்யில் வளர்ந்த புலவர் பெருமானே.. மன்னிக்கவும் புழுகர் பெருமானே இதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும்.
பெண்களுக்கான பாதுகாப்பு
முதலமைச்சரின் பொய் வாக்குறுதிகளில் ஒன்று பெண்களுக்கான பாதுகாப்பு தான். தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார். அது உண்மை எனில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏன் இளம் பெண்ணுக்கு வன்கொடுமை நடந்தது? கோயம்புத்தூரில் கல்லூரி மாணவிக்கும் அதே கொடுமை ஏன் நடந்தது? பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக 1,000க்கும் அதிகமான போக்சோ வழக்குகள் ஏன் பதிவாகின?
பொறுப்பு டிஜிபி
போதைப்பொருள் கலாச்சாரம் கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்திருக்கிறது. வன்முறைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணம் திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுவர்கள் வன்முறையில் ஈடுபட்டது தான். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் ஏன் இப்படி எல்லாம் நடக்கப்போகிறது? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டுமெனில்.. முதலில் தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபியை நியமிக்க வேண்டும். டிஜிபி எங்கே சென்றார்? பொறுப்பு அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தினால் சட்டம் ஒழுங்கு இப்படி தான் இருக்கும்" என விமர்சித்திருக்கிறார்.
பாஜகவை விமர்சிக்க மாட்டாரா?
உண்மையில் பொறுப்பு டிஜிபியை நியமித்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. பொறுப்பு டிஜிபி விஷயத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் விஜய், பாஜக ஆளும் மாநிலத்திலும் இதே மாதிரித்தான் இருக்கிறது. அதை ஏன் விமர்சிக்கவில்லை? உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2022 முதல் பொறுப்பு டிஜிபிதான் பதவியில் இருக்கிறார்கள். அதைப்பற்றி வாய் திறப்பாரா விஜய்? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications