சேலத்தில் அதிர்ச்சி.. 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை.. இரு காமுகர்கள் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை இந்தக் கொடுமைக்கு ஆளானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எவ்வளவு முயன்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
பெண் குழந்தைகள் பாலியல் டார்ச்சருக்கு உள்ளாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? கிருத்திகா உதயநிதி யோசனை
சேலத்தில் அதிர்ச்சி
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 80 வயது மூதாட்டியை இளைஞர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு யாரும் ஆதரவற்ற நிலையில் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மற்றும் அப்பகுதியில் சிறுசிறு கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார். மேலும் ரேசன் கடையில் வழங்கப்பட்டும் அரிசி வாங்கி தனியே உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.
80 வயது மூதாட்டி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரது விவசாய நிலத்தில் அந்த மூதாட்டி களை பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அந்த நங்கவள்ளியைச் சேர்ந்த 22 வயதான விக்னேஷ் 19 வயதான சீனிவாசன் ஆகியோர் வயலுக்கு அருகே அமர்ந்து மதுகுடித்துள்ளனர். போதை ஏறிய நிலையில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டியை வயதானவர் என்றும் பாராமல் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
இளைஞர்கள் கைது
தலைக்கேறிய மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் அத்துமீறலில் ஈடுபட்ட இருவரது செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டதையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் இருவரையும் பிடித்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . மூதாட்டி அளித்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி நிலையில் குடி போதையில் தகாத செயலில் ஈடுபட்ட விக்னேஷ், சீனிவாசன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரைத்தார். இதை ஏற்று விக்னேஷ் சீனிவாசன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார். இதையடுத்து கிளை சிறையில் இருந்த இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.