"ராசியானவர்".. மந்திரவாதி சேகரிடம் பெற்ற பெண்களை விட்டுவிட்டு சென்ற பெற்றோர்.. மிரண்டு போன சேலம்!
சேலம் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்
சேலம்: ராசியான மந்திரவாதி என்று நம்பி, பெற்ற மகள்களை அவரிடம் விட்டுவிட்டு சென்றுள்ளனர் விவரமறியா பெற்றோர்.. இறுதியில் அந்த மந்திரவாதி தன் வேலையை காட்ட.. இப்போது அவர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சேலம் மாவட்டம் வழைப்பாடி அருகேயுள்ளது பொன்னாரம்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் ஒரு தம்பதியினர், சுக்கம்பட்டியில் உள்ள வேறு ஒருவரின் விவசாய தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.. அவர்களுக்கு 15 மற்றும் 13 வயதாகிறது.. இருவரும் ஸ்கூல் படிக்கிறார்கள்.. ஆனால், இப்போது லீவு என்பதால், அப்பா, அம்மாவுடன் சுக்காம்படி தோட்டத்திலேயே இவர்களும் சேர்ந்து வசித்து வந்தனர்.
கவலை
இந்த நிலையில், 2 பெண் குழந்தைகளும் எங்கோ எதையோ பார்த்து பயந்துவிட்டதாக கூறப்படுகிறது.. அதனால் யாருடனும் பேசாமல் முகம் வெளிறி போய் இருந்துள்ளனர்.. இதனால் பெற்றோர், கவலை கொண்டனர்.. பிள்ளைகள் இப்படி பேசாமல் இருப்பதால், அந்த பகுதியில் உள்ள ஒருசில சாமியார்களிடம் அழைத்து சென்று மந்திரித்து வந்தனர்.
சேகர்
ஆனாலும் அந்த பெண்கள் அப்படியேதான் இருந்தனர்.. சரியாக பேசவில்லை. இந்த சமயத்தில்தான் சேகர் என்ற மந்திரவாதி பற்றி கேள்விப்பட்டனர்.. அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் என்றும் ராசியானவர், அவரிடம் அழைத்து சென்றால், குழந்தைகளுக்கு பேச்சு வந்துவிடும் என்றும் சிலர் சொல்லி உள்ளனர்.. அதன்படியே இரண்டு பெண்களையும் அங்கு அழைத்து சென்றுள்ளனர் பெற்றோர்.
வெள்ளிக்கிழமை
அவர்களை மந்திரவாதி சேகர் செக் செய்து பார்த்தார்.. உடனே "2 மகள்களுக்கு பேய் பிடித்து விட்டது, அதனை விரட்ட வேண்டும் என்றால் வெள்ளிக்கிழமைதான் சரியான நாள், அதனால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பேய் ஓட்டும் பூஜை செய்ய வேண்டி உள்ளது.. அதுவரை இந்த பெண்கள் இங்குதான் தங்கவேண்டும்" என மந்திரவாதி சொன்னார்.
பூஜை
உடனே பெற்றோரும், மகள்கள் எப்படியாவது பேசினால் போதும் என்று நினைத்து, சேகரிடம் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்றனர்... உடனே சேகர், பூஜை செய்வதாக சொல்லி, ஒவ்வொரு முறையும் அந்த சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.. இந்த விஷயத்தை அந்த குழந்தைகளும் வீட்டில் சொல்லாமலேயே இருந்துள்ளனர்.
புகார்
கடைசியில் வேறு வழியின்றி அந்த பெண்கள் அழுதபடியே நடந்ததை சொல்லவும், அதை கேட்டு பெற்றோர் அதிர்ந்து போனார்கள்.. உடனடியாக மங்களபுரம் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில், சேகரை பிடித்து விசாரிக்கும்போதுதான் தெரிந்தது, அவர் இப்படிதான் பல பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர் என்று! இப்போது மந்திரவாதி சேகர் ஜெயிலில் உள்ளார்!
சிந்தனை
பொதுமக்களில் சிலருக்கு பக்தியோ, நம்பிக்கையோ, முத்தி போய்விட்டால் சிந்திக்கும் திறனும் மழுங்கிவிடுமா என்ன? இதுபோன்றவர்களை ஏமாற்றவே ஒரு குரூப் கிளம்பி வந்து கொண்டே இருக்கிறார்கள்... வந்த வேகத்தில் கைதாகி ஜெயிலுக்கும் சென்று கொண்டே இருக்கிறார்கள்.. ஆயிரம் 'பெரியார்கள்' வந்தாலும் சிலரை திருத்தவே முடிவதில்லை!