“சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!” திமுக இளைஞரணி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்
சேலம்: சேலத்தில் நாளை நடைபெறவுள்ள திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு "சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்!" என அழைப்பு விடுத்துள்ளார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடக்கிறது. இதையொட்டி கோட்டை கொத்தளம் போன்ற அலங்கார நுழைவு வாயில், பிரமாண்ட பந்தல் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு கடந்த 2007ஆம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இரண்டாவது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை நடக்கிறது. கடும் மழை, புயல் காரணமாக இந்த மாநாடு ஏற்கனவே இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், திமுக இளைஞர் அணி மாநாடு நாளை நடக்கிறது.

இந்த மாநாட்டிற்காக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் 9 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக இளைஞரணி மாநாட்டின் முகப்பில் கோட்டை கொத்தளம்போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் நுழைவு வாயில் முகப்பில் முப்பரிமாண வடிவமைப்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியேந்திச் செல்வது போல் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சேலம் வருகை தர உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விமானத்தில் சேலம் வருகை தந்துள்ளார். திமுக இளைஞரணியின் மாநாட்டையொட்டி, ஒட்டுமொத்த சேலம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இதுதொடர்பாக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்! லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் திமுக இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.
மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. 'இந்தியா' கூட்டணியின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி - பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம். அனைவரும் வருக!" என அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications