சேலத்தில் மனைவி மகளுடன் தற்கொலை செய்து கொண்ட வெள்ளிப்பட்டறை தொழிலாளி.. உருக்கமான கடிதம் சிக்கியது
சேலம்: சேலத்தில் கடன் தொல்லை காரணமாக வெள்ளிப் பட்டறை தொழிலாளி மனைவி மற்றும் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் வாங்கி புது வீடு கட்டி ஒரு ஆண்டு கூட ஆகாத நிலையில், அதற்கான கடனை கட்ட முடியாததால் இந்த சோக முடிவை எடுத்துள்ளார். அவர் உருக்கமாக எழுதிய தற்கொலை கடிதமும் சிக்கியுள்ளது.
சேலம் மாவட்டம் அரிசிபாளையம் அருகே முத்தையாள் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 45). இவரது மனைவி ரேகா (38). இவர்களுக்கு 16 வயதில் ஜனனி என்ற மகள் இருந்தாள். ஜனனி அங்குள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். பால்ராஜ் வீட்டிலேயே வெள்ளிப் பட்டறை வைத்து இருந்தார். அவரது மனைவி ரேகாவும் கணவருடன் சேர்ந்து வேலை செய்து வந்தார்.

பால்ராஜ் மொத்தமாக வெள்ளிக் கட்டிகளை வாங்கி, ஆர்டரின் பேரில் கொலுசு, மோதிரம், கொடி உள்ளிட்ட பொருட்களை செய்து கொடுத்து வந்தார். இந்த நிலையில், பால்ராஜ் கடந்த ஆண்டு புதிதாக ஒரு வீடு கட்ட நினைத்தார். கையில் குறைவாக பணம் இருந்ததால், கடன் வாங்கியாவது வீடு கட்டிவிட வேண்டும் என்று நினைத்தார். இதற்காக முன்பு குடியிருந்த இடத்திலேயே புதிதாக வீடு கட்ட ஆரம்பித்தார்.
இதற்காக தனியார் வங்கி மட்டும் இன்றி தனக்கு தெரிந்த சிலரிடமும் லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு வீட்டை கட்டி முடித்துவிட்டார். நாட்கள் செல்ல செல்ல வெள்ளிப் பொருட்களுக்கான ஆர்டர் குறைந்துள்ளது. இதனால் போதிய வருமானம் இல்லாமல் பால்ராஜ் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வாங்கிய கடனை கட்ட முடியாமல் பணக் கஷ்டத்தில் தவித்து வந்துள்ளார்.
கடன் கொடுத்தவர்களும் பால்ராஜிடம் வந்து பணத்தை கேட்டு சென்று இருக்கின்றனர். இதனால் பால்ராஜ் மிகுந்த மனக்கவலை அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் பால்ராஜ் வீட்டுக்கு சிலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு அவர் வீடு பூட்டப்பட்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் வீட்டில் இருந்து யாரும் கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்து முதல் மாடி வழியாக பார்க்கும் போது சேலையில் தூக்கில் தொங்கியபடி பால்ராஜ் இருந்துள்ளார். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பால்ராஜ் மட்டுமின்றி அவரது மனைவி ரேகா மற்றும் மகள் ஜனனி ஆகியோரும் சேலையில் தூக்கில் தொங்கியபடி இருந்தனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வீட்டில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று கிடைத்ததாக கூறப்படுகிறது. அதில் "நான் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டேன். இதனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் நாங்கள் தற்கொலை செய்துகொள்கிறோம்" என்று எழுதியிருந்தது.
பால்ராஜ் எந்த வங்கியில் கடன் வாங்கியிருந்தார் என்றும், யார் யாரிடம் பணம் வாங்கியிருந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடன் தொல்லையால் மனைவி மற்றும் மகளுடன் வெள்ளிப்பட்டறை தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications