அண்ணனுக்கு போட்டியாக தம்பி... வீரபாண்டி ராஜாவை ஓவர் டேக் செய்யும் வீரபாண்டி பிரபு
சேலம்: பரபரப்புக்கு பஞ்சமில்லாத சேலம் மாவட்ட திமுகவில் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக புதிய புதிய கோஷ்டிகள் உருவாகி வருகிறது.
மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் இளையமகனும், மருத்துவருமான பிரபு, அரசியலில் தனது அண்ணன் வீரபாண்டி ராஜாவை ஓவர் டேக் செய்யும் வகையில் தீவிர அரசியலில் குதித்துள்ளார். சேலம் என்றாலே திமுகவினருக்கு நினைவுக்கு வருவது வீரபாண்டி ஆறுமுகம் முகம் தான். அந்தளவிற்கு சேலம் மாவட்டத்தில் அசைக்க முடியாத ஆளுமையாக திகழ்ந்தவர். அவரது மறைவுக்கு பிறகு அவரது இரண்டாவது மகன் ராஜா மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தார். இப்போது அந்த பதவியும் பறிபோய்விட்டது.

இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மனைவியான லீலாவதியின் மகன் பிரபு இப்போது தீவிர அரசியலில் குதித்துள்ளார். மருத்துவரான பிரபு தனது தாய் லீலாவதியுடன் சென்னையில் வசித்து வருகிறார். வீரபாண்டி ஆறுமுகத்தின் முதல் மனைவி வழி உறவுகள் மற்றும் பிள்ளைகள் யாரும் லீலாவதியுடன் தொடர்பில் இல்லை. இரு குடும்பத்திற்கும் இடையே சொத்துப் பிரச்சனை வேறு உள்ளது. இந்த சூழலில் மருத்துவர் பிரபு தனது தந்தையை போல் சேலத்தில் அரசியல் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.
ஆனால் அதற்கு இத்தனை நாட்களாக அவரது அண்ணன் வீரபாண்டி ராஜா குறுக்கீடாக இருந்தார் எனக் கூறப்பட்டது. இப்போது அவர் மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இல்லாததால் தனக்கு ரூட் கிளியராகிவிட்டது என கருதும் பிரபு, அடிக்கடி சேலத்திற்கு வருகை தருகிறார். கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகள், திருமணம், சடங்கு என எதையும் தவிர்க்காமல் அனைத்து நிர்வாகிகள் வீடுகளுக்கும் சென்று வருகிறார். பற்றாகுறைக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தில் உள்ள இளைஞர்களுடன் அதிகம் நட்பு பாராட்டுகிறார்.
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் உள்ள வீரபாண்டி ராஜாவின் நிலை உள்ளது. ஒரு பக்கம் தலைமை, மற்றொரு பக்கம் தம்பி என அவருக்கு எதிராக அரசியல் காய் நகர்த்தல் உள்ளதால் சற்று விரக்தி நிலையில் தான் உள்ளார் ராஜா. இதனிடையே வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் பிரபு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications