அன்புமணி கூட்டத்துக்குள் புகுந்த வீரப்பன் மகள்.. கண்ணீர் மல்க கதறியபடி போராட்டம்! கைது செய்த போலீஸ்!
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூரில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்த போது நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் அங்கு போட்டியிடும் வேட்பாளரும் வீரப்பனின் மகளுமான வித்யா வீரப்பன் கூட்டத்தில் உள்ளே புக முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து போலீசார் அவரை அழைத்துச் சென்ற நிலையில் கண்ணீர் மல்க அவர் வெளியேறிய காட்சிகள் பதட்டத்தை ஏற்படுத்தியது.
மேச்சேரி பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால், அப்பகுதியில் கூட்ட நெரிசலும் காணப்பட்டது.

அதே நேரத்தில், மேட்டூர் நோக்கி செல்வதற்காக வித்யா வீரப்பன் தனது ஆதரவாளர்களுடன் அந்த வழியாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டப்பகுதிக்குள் அவர் நுழைய முயன்றதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அங்கு பணியில் இருந்த காவல்துறையினர், வித்யா வீரப்பனை தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்த வித்யா வீரப்பன், தொடர்ந்து உள்ளே செல்ல முயன்றதால், காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் சாலையிலேயே அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவரது ஆதரவாளர்களும் அங்கு திரண்டதால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் வராததால், வித்யா வீரப்பன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து வித்யா வீரப்பன் பேசுகையில், சிந்தாமணி முதல் கோவிந்தபாடி வரை இருசக்கர வாகன பேரணி நடத்துவதற்காக முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்ததாகவும், ஆனால் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் நடைபெற்றதால் தங்களை அந்த வழியாக செல்ல அனுமதிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். நீண்ட நேரமாக காத்திருந்தும் அனுமதி வழங்கப்படாததால், நேரடியாக அன்புமணி ராமதாஸிடம் சென்று இதுகுறித்து தெரிவிக்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்னை மட்டும் பல இடங்களில் சோதனை செய்வதாகவும், மற்ற வேட்பாளர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் நடைபெறவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதேசமயம் காவல்துறையினர் தரப்பில், தேவையான அனுமதி முறையாக பெறப்படாத காரணத்தாலேயே அவரை தடுத்து நிறுத்தியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications