மேட்டூர் அணை பெருகுது.. ஒரே நாளில் 7.6 அடி உயர்ந்த நீர்மட்டம்.. விவசாயிகளுக்கு கொண்டாட்டம் தான்!
சேலம்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 71,777 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7.6 அடி உயர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி அணைகளுக்கு, நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, தற்போது விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர், காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு நேற்று காலை 53,098 கன அடியாக இருந்த நிலையில் நேற்று இரவு 69,673 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை 71,777 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 61.31 அடியில் இருந்த நிலையில் இன்று காலை 68.91 அடியாகவும், நீர் இருப்பு 25.67 டிஎம்சியில் இருந்து 31.77 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 7.6 அடியாகவும், நீர் இருப்பு 6.1 டிஎம்சி ஆகவும் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரத்தை கடந்து வந்து கொண்டிப்பதால், நீர்தேக்க பகுதியான, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதியில் 5 நாட்களாக பரிசல் சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அணை நீர் தேக்கப் பகுதியில் நிலத்தை உழுது பயிரிட்டு இருந்த விவசாயிகள் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பயிர்களை அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர். தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையால் காவிரி டெல்டா விவசாயிகள் அதிகளவு பயன்பெற்று வருகின்றனர். இது மட்டுமில்லாமல் குடிநீர் தேவைக்கும் காவிரி நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. டெல்டா பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பயன்பெறும். இந்நிலையில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்வது அனைவரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications