லோக்சபா தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால் யாருக்கு ஆதரவு? எடப்பாடி பழனிசாமி பரபர திட்டம்!
சேலம்: லோக்சபா தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி அமைப்பதில் இழுபறி என்ற நிலை வந்தால் என்ன முடிவு எடுப்போம் என்பது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

எடப்பாடி பேட்டி: தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. மற்ற வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின், 98 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப் பொய்யை பிரச்சார கூட்டங்களில் கூறி வருகிறார்.
நதிநீர் பிரச்சனை, போதைப் பொருள் புழக்கம், வேலையில்லா திண்டாட்டம், மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகள் தமிழகத்தில் நிலவி வருகின்றம. மத்தியில் ஆளும் பாஜக அரசும் 2019ல் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போதும் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.
தனித்து நிற்பது ஏன்?: மாநில உரிமைகளை பாஜக பறிப்பதனால்தான் அந்தக் கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தனித்து போட்டியிடுகிறது. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வருவது எந்த பயனையும் கொடுக்காது. இதனால் தமிழகத்திற்கும் பயன் இல்லை, அவர்களுக்கும் பயன் இல்லை. வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு திட்டத்தை தொடங்கி வைத்திருந்தால் தமிழகம் வளர்ச்சி அடைந்திருக்கும்." எனத் தெரிவித்தார்.
அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை: அதிமுக, தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அண்ணாமலை, "அதிமுக 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. அதிமுகவை அழிக்க இன்னும் யாரும் பிறக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்யும் ஒரு இயக்கத்தை அழிப்போம் என்று கூறுவதெல்லாம் வெறும் கனவு, வெற்று வார்த்தைதான். அதிமுகவை அழிப்பது என்பது ஒருபோதும் நடக்காது." என்றார்.
தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால்: மேலும், லோக்சபா தேர்தல் முடிவுகளில் இழுபறி நிலைமை வந்தால் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்? உரிமைகளை நிலைநாட்ட தனித்துத்தான் நிற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications