"வயசு கேட்டா 19னு சொல்றான்.. பொண்ணு கிடைச்சதும் கல்யாணம்தான்”- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலகல!
சேலம்: பேரறிவாளனுக்கு ஏற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைப்போம் என பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தனர்.
Recommended Video
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அற்புதம்மாள், பேரறிவாளனின் திருமணத்திற்கான பெண் தேடலும் இனி நடைபெறும் என்று கூறியுள்ளார்.

பேரறிவாளன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக் கூறினர்.
விடுதலை செய்யப்பட்டதையடுத்து, பேரறிவாளனும் அவரது தாயார் அற்புதம் அம்மாளும், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
அந்தவகையில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோர் இன்று சேலத்திற்கு வருகை தந்தனர். அப்போது சேலம் மாவட்டம் மேட்டூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்தனர்.
இதையடுத்து சேலம் தனியார் ஹோட்டலில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சுதந்திர மனிதன்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அற்புதம் அம்மாள், "31 ஆண்டுகளாக சாமானியர்களின் குரல் எடுபடாது என்று இருந்த நிலையில் 31 ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மகனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இனி சுதந்திர மனிதனாய் வலம் வருவார். சட்டப்படி நாங்கள் போராடினோம். நிறைய பேர் சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கும் இந்த தீர்ப்பு பயனுள்ளதாக அமையும்" எனத் தெரிவித்தார்.

பேரறிவாளன் திருமணம்
மேலும் பேசிய அற்புதம் அம்மாள், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். பேரறிவாளன் யார் கேட்டாலும் என் வயது 19 என்கிறார். அதன்பிறகான காலத்தை எல்லாம் சிறையில் தான் கழித்திருக்கிறார். அவர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைப்போம். அவரது திருமணத்திற்கான பெண் தேடலும் இனி நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய பேரறிவாளன், தமிழக அரசு எங்களுக்கு பேருதவியாக இருந்துள்ளது. மாநில அமைச்சரவையின் முடிவு இறுதியானது என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார்.

திருமண ஏற்பாடு
பேரறிவாளனுக்கு விடுதலை தீர்ப்பு வந்தபிறகு பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் செய்தியாளர்களைச் சந்தித்து அனைவருக்கும் நன்றி கூறினார். அப்போது, பேரறிவாளன் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அதுகுறித்து அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் பேரறிவளனுக்கு ஜாமீன் கிடைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அற்புதம் அம்மாள், பேரறிவாளனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications