தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? சேலம் பல்கலை. வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூரில் செயல்பட்டு வருகிறது பெரியார் பல்கலைக்கழகம். 1997ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெரியார் பல்கலைக்கழகத்தில், லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன.

அண்மைக் காலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சிபிஎஸ்இ தேர்வு வினாத்தாளில் சாதி ரீதியாக கேட்கப்படும் கேள்விகள் பெரும் விமர்சனத்தை சந்தித்தன. அண்மையில் அம்பேத்கரின் சாதி குறித்த கேட்கப்பட்ட கேள்விகள், பெண்கள் குறித்து கருத்துகள் ஆகியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியாக கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வுக்கான வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது.
இந்தக் கேள்வி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து துணைவேந்தர் ஜெகநாதன் கூறுகையில், முதுகலை வரலாறு 2ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள் பிற பல்கலைக்கழக கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. வினாத்தாள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே படித்து பார்க்கும் வழக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 27 துறைகளில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்களுக்கு, பதவி உயர்வு, பணி நியமனம் மற்றும் முக்கிய பொறுப்புகள் வழங்குவதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று புகார் எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசுக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் புகார்களை அனுப்பினர். அதில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும், பணி நியமனம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரே அப்பகுதி மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சாதி ஒழிப்பை வலியுறுத்தி தனது கடைசி காலம் வரை போராடிய தந்தை பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் சாதி பற்றி கேட்ட கேள்வி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications