மோடிக்கு யார் அடிமை என்பதில் ஓபிஎஸ் -இபிஎஸ் இடையே போட்டி! வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார போட்டி பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி
சேலம்: மோடிக்கு அடிமையாக இருப்பதில் யார் நம்பர் 1 என்பதில் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் பிரதமர் மோடி தான் எஜமானர் என அவர் கூறியிருக்கிறார்.
சேலத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மண விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.
பிபிசியின் ஆவணப்பட சர்ச்சை.. சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட எஸ்.எஃப்.ஐ மாணவர்கள் திட்டம்
சேலம் பயணம்
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலம் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இதனிடையே திமுக இளைஞரணி நிர்வாகி இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தாம் மணமக்களுக்கு அறிவுரை கூறப்போவதில்லை என்றும் கூறினாலும் அதனை மணமக்கள் கேட்கப் போவதில்லை எனவும் கூறி கலாய்த்தார்.
ஓ.பி.எஸ். -இ.பி.எஸ்.
மணமக்கள் இருவருமே படித்தவர்கள், மருத்துவர்களாக இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து தன்மானத்தோடு வாழ வேண்டும் எனக் கூறினார். கலைஞரும் தமிழும் போல வாழ வேண்டும், ஸ்டாலினும் உழைப்பும் போல வாழ வேண்டும் என நிறைய பேர் சொல்வார்கள் என்றும் ஆனால் தன்னை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போல் மட்டும் மணமக்கள் வாழக் கூடாது எனக் கூறினார். அருகருகே அமர்ந்திருந்தாலும் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறி சட்டசபை நிகழ்வுகளை சுட்டிக்காட்டினார்.
யார் அடிமை?
இதனால் திருமண விழா மேடையில் சிரிப்பலை எழுந்தது. இதனிடையே பிரதமர் மோடிக்கு அடிமையாக இருப்பதில் யார் நம்பர் 1 என்பதில் தான் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி நிலவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருக்குமே டெல்லியில் உள்ள பிரதமர் மோடி தான் எஜமானர் என வெளுத்து வாங்கினார். அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை என்ன கொடுத்தாலும் சரி என்று தலையாட்டிக் கொண்டு இருந்தவர்கள் அவர்கள் இருவரும் எனப் பேசினார்.
பேப்பர் இல்லை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசிய போது எந்த குறிப்பையும் பார்க்காமல் மனதில் தோன்றியதை 5 நிமிடம் பேசிவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.