சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் சப்-இன்ஸ்பெக்டருக்கு செருப்படி.. ஆவேசமான பெண்.. நடந்தது என்ன?
சேலம்: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை செருப்பால் தாக்கிய பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் தங்கை கமலேஸ்வரி உள்பட மூன்று பேர் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு காரில் செல்லும் போது, ஏற்பட்ட தகராறில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 43 வயதாகும் கார்த்திக் என்பவர் லாரி டிரைவர் ஆவார். இவருடைய தங்கை கமலேஸ்வரிக்கு 35 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது உறவினர் ஓமலூர் காடையாம்பட்டியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (28) என்பவர் கார் டிரைவர் ஆவார். இதில் கார்த்திக்கின் தங்கை மகன் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்த அவரை மீண்டும் கரூர் அனுப்புவதற்காக நேற்று முன்தினம் இரவு அவர்கள் ஒரு காரில் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு குடும்பமாக வந்தனர். காரை ஹரிகிருஷ்ணன் ஓட்டி வந்தார். குரங்குச்சாவடியில் இருந்து மேம்பாலம் வழியாக புதிய பஸ் பேருந்து நிலையதிற்குள் கார் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பள்ளப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலன், காரை நிறுத்தி புதிய பஸ் நிலையத்திற்குள் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கிறது. எனவே இந்த வழியாக காரில் செல்ல முடியாது என்று திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

அப்போது ஏன் காரில் உள்ளே போகக்கூடாது. என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது எஸ்ஐ மற்றும் கமலேஸ்வரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உணர்ச்சி வயப்பட்டவராக மாறிய கமலேஸ்வரி , ஆவேசத்துடன் காரில் இருந்து இறங்கி உள்ளார். பின்னர் உடனடியாக தனது காலில் கிடந்த செருப்பை எடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலனை 2 முறை தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த அருகில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். செருப்பால் தாக்கிய கமலேஸ்வரியை பயணிகள் கெட்டியாக பிடித்து கொண்டனர்.
இந்த தாக்குதல் குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணவேலன் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி, அவரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், கமலேஸ்வரி, ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார்கள். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை, ஒரு பெண் செருப்பால் அடித்த சம்பவம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு நிமிடத்தில் நிதானம் தவறிய பெண்ணால், சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடி முடித்துவிட்டு ஊருக்கு செல்ல வேண்டியவர்கள் இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்கள். உணர்ச்சிவசப்பட்டு செய்யும் சில தவறுகள், பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. அசிங்கமான வார்த்தைகளைவிடுவது, கோபத்தில் கத்துவது, ஆத்திரத்தில் கைநீட்டுவது போன்ற நிதானம் தவறி செய்யும் சில தவறுகளால் தான் இன்று பலர் சிறையில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications