துருக்கி நாட்டுக்குப் பறந்த திமுக எம்.எல்.ஏ.! யாரை சந்திக்க இந்தப் பயணம்? பின்னணி இது தான்!
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜா, துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு பயணம் சென்றிருக்கிறார்.
தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து முறைப்படி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்திய பிறகே எம்.எல்.ஏ.ராஜா விமானமே ஏறியிருக்கிறார்.
4 ரூபாய் போதாது என்றேன்.. கருணாநிதி 10 ரூபாய் கொடுத்தார்.. நன்றியுடன் நினைவுக்கூறும் குமரி அனந்தன்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் மல்லுக்கட்டியவர் இந்த எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கரன்கோவில் தொகுதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜா. ஆறடி உயரத்தில் ஆஜானபாகுவான தோற்றத்தில் உள்ள இவர், வலு தூக்கும் வீரரும் ஆவார். எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பாக தமிழகம் மட்டுமின்றி தேசியளவில் வலு தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளி வருவார் ராஜா. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினரான பிறகும் தனது ஆர்வத்தை அதிலிருந்து சற்றும் குறைத்துக்கொள்ளவில்லை.
இஸ்தான்புல் நகர்
மக்கள் பணிகளோடு சேர்த்து போட்டிகளில் பங்கேற்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார் ராஜா எம்.எல்.ஏ. அந்த வகையில் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஒரு வாரம் நடைபெறும் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற ராஜா எம்.எல்.ஏ., 140 கிலோ எடை தூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். இதன் மூலம் திமுகவுக்கும், தமிழகத்திற்கும் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெருமை தேடித்தந்துள்ளார்.
டிச.24 டூ டிச.30
துருக்கியில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டி நாளையுடன் நிறைவடைகிறது. இதனிடையே இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்பும் திமுக எம்.எல்.ஏ. ராஜா, தாம் பெற்ற பதக்கத்தை முதலமைச்சரிடம் காட்டி வாழ்த்து பெறுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னரும் இதேபோல் பல போட்டிகளில் தாம் பெற்ற பரிசுகளை முதல்வரிடம் காட்டி வாழ்த்து பெற்றிருக்கிறார்.
வைகோவுடன் சண்டை
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் உரசியவர் ராஜா எம்.எல்.ஏ. என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு சங்கரன்கோவில் தொகுதியை திமுக வசம் ஆக்கியதாலும், தொகுதியில் ஓடி ஆடி மக்கள் பணி புரிவதாலும் ஆட்சி மேலிடத்தின் ஆசிர்வாதம் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.