சிங்கப்பூரில் தமிழ் ஓட்டலுக்குள் நுழைந்ததுமே.. முதல்வர் ஸ்டாலின் செய்தது தான் செம்ம சர்ப்ரைஸ்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்குள்ள ஒரு தமிழ் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கிருந்த மக்கள் அவரை பார்த்ததும் பூரித்து போய் அவரிடம் பேசினார்கள். அத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனவரி 2024இல் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கவே சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாட்டிற்கு அதிக தொழில்முதலீடுகளை கொண்டு வரும் நோக்கில் இந்த சுற்றுப்பயணம் அமைந்திருப்பதால், முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து பேசி வருகிறார்.
நேற்று சிங்கப்பூரில், அந்நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார். மேலும் இருநாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடினார்.
இந்த நிலையில் இன்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். அவரையும் தமிழ்நாட்டில் நடக்கும் முதலீட்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இதை தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள தமிழக உணவகம் ஒன்றுக்கு சர்ப்ரைஸ் விசிட்டாக முதல்வர் ஸ்டாலின் சாப்பிட சென்றார். அங்கிருந்த தமிழர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் முதல்வர் ஸ்டாலினை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் பேசிய அவர்கள், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஓட்டல் ஊழியர்கள் அவருக்கு காபி மற்றும் உணவுகளை கொடுத்தனர். அதற்கு அவர் பணம் செலுத்திவிட்டு பில்லை வாங்கியபடி வெளியே வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனிடையே முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணத்தை முடித்து கொண்டு ஜப்பான் செல்கிறார்.












Click it and Unblock the Notifications