போர்க் குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய சிங்கப்பூர் அரசுக்கு மனித உரிமை அமைப்பு நெருக்கடி
சிங்கப்பூர்: இலங்கை போர்க் குற்றவாளியான அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
Recommended Video
இலங்கையின் பொருளாதார நிலைமையை சீரமைக்க முடியாமல் பதவியை கைவிட்டு ஓடிப் போனவர் கோத்தபாய ராஜபக்சே. முதலில் மாலத்தீவுக்கு தப்பிப் போன கோத்தபாய ராஜபக்சே பின்னர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.

சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் உதவியுடன் சவுதி செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் சிங்கப்பூரிலேயே கோத்தபாய ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர். மேலும் பல்வேறு நாடுகளிலும் ஈழத் தமிழர்கள், கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய கோரி போராட்டங்களையும் நடத்துகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு வலியுறுத்தி இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. 2009-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இறுதி யுத்த காலத்தில் ஒன்றரை லட்சம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் கோத்தபாய ராஜபக்சேதான்.
சர்வதேச நெறிமுறைகளை மீறி தமிழீழத் தமிழர்களை கோத்தபாய ராஜபக்சே இனப்படுகொலை செய்தார்; அவரது கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களை மேற்கொண்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசுக்கு சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications