ரூ.11 கோடி மதிப்புடைய கோயில் நகைகளை... அடகு வைத்த தலைமை குருக்கள்... சிங்கப்பூரில் கைது
சிங்கப்பூர்: கோயில் நகைகளை கையாடியதாக சிங்கப்பூர் நாட்டிலுள்ள மாரியம்மன் கோயிலின் தலைமை குருக்கள் மீது வழக்குப்பிதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாட்டின் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அந்நாட்டின் மிகவும் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. 194 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் அர்ச்சகராக இந்தியவைச் சேர்ந்த கந்தசாமி சேனாபதி தலைமை குருக்களாக இருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இவர் தலைமை குருக்களாக இருந்த போது கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகளை கையாடிதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நகைகள் வழக்கமாக கோயில் பூஜைகளின் போது பயன்படுத்தப்படும். இந்த நகைகளை அடகு வைத்த கந்தசாமி, சுமார் 1.40 லட்சம் சிங்கப்பூர் டாலர்களை தனது சொந்த காரணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்.
இந்தப் பணத்தில் பெரும்பகுதியை அவர் பல்வேறு வங்கிகளை பயன்படுத்தி இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கோயிலுள்ள நகைகளை அதிகாரிகள் சரிபார்த்தபோது நகைகள் காணாமல் போகியிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். கந்தசாமி பின்னர் எப்படியோ பணத்தை திரட்டி கோயில் நகைகளில் ஒரு பகுதியை கோயிலில் திருப்பி வைத்துவிட்டார். சிங்கப்பூர் கைது போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், தலைமை குருக்கள் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
திருட்டு, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கந்தசாமி மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதம் விதிக்கப்படலாம்.