மீண்டும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் திட்டம்! சிங்கப்பூர் நாளிதழில் மனம் திறந்த ஸ்டாலின்!
சிங்கப்பூர்: கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போல் இந்த முறையும் மீண்டும் அதை நடத்தும் திட்டம் உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியிருக்கிறார். மேலும், அந்த பேட்டியில் அதிமுக விவகாரம், பாஜகவுடனான கூட்டணி குறித்தெல்லாம் மனம் திறந்துள்ளார். ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு;

''தமிழ்நாடு வளர்ந்த வளமிக்க மாநிலமாக இருப்பதால் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காகத் தமிழகத்திற்கு வருகிறார்கள், அவ்வளவுதான்! இது தமிழ்நாட்டுக்கு நன்மையே தவிர தீமையன்று. அதற்காக மற்றவர்களது வேலைவாய்ப்பை அவர்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
எங்களைப் பொறுத்தவரை, தமிழர் நலனும் தமிழ்நாட்டின் மேன்மையுமே முக்கியம். அதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம். தமிழ் கட்டாயம், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
அதிமுக இப்போது நான்கு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. அவர்களது பலவீனத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்வதில்லை. எங்களது கொள்கைகளையும் தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் இருப்போம்.
கலைஞர் காலத்தில் நிகழ்ந்ததைப்போல, பாஜகவடன் திமுக கூட்டு சேர வாய்ப் பில்லை, வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பாஜகவிற்கும் இன்றைய பாஜக விற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அமைச்சராக உதயநிதியின் செயல்பாடு பெருமைப்படத்தக்க வகையில் இருக்கிறது.
முந்தைய திமுக ஆட்சியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியது போல, இம்முறையும் அதற்கான திட்டம் உண்டு. அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும்.'' இவ்வாறு சிங்கப்பூர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் மனம் திறந்துள்ளார்.












Click it and Unblock the Notifications