''தவறான தகவல் வேண்டாம்.. எங்கள் நாட்டில் புதிய திரிபு வைரஸ் பரவவில்லை''.. சிங்கப்பூர் விளக்கம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புதிய வகை திரிபு கொரோனா வைரஸ் பரவவில்லை என்று அந்த நாடு விளக்கம் அளித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் ஆட்டிப்படைத்து வருகிறது.
கொரோனா வைரஸ் உருவகத்தை செயலிழக்க செய்ய முயன்றாலும் அந்த வைரஸ் புதிய புதிய மாறுபாடு அடைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
கொரோனா சிகிச்சை.. ரெமிடிஸ்வர் மருந்து விரைவில் கைவிடப்பட வாய்ப்பு.. டெல்லி மூத்த மருத்துவர் தகவல்
புதிய திரிபு வைரஸ்
முதல் அலை, இரண்டாவது அலை என்று கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை முதல் அலையை விட, இரண்டாவது அலை கொடூரமாக உள்ளது. புதிய திரிபு அடைந்த கொரோனா வைரஸ்(B.1.617.2) காரணமாகவே இந்தியாவில் 2-ம் அலை அதிக தாக்கத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் புதிய வைரஸ்
சிங்கப்பூரில் புதிய திரிபு வைரஸ் பரவி வருவதாக தகவல் பரவியது. இந்த திரிபு வைரஸ் குழந்தைகளை அதிகம் பாதிக்கும். இது மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வந்தன. இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய வடிவம் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு ஆபத்து
இந்தியாவில் இது மூன்றாவது அலையாக வரக்கூடும் என்றும் கூறுகிறார்கள். எனவே மத்திய அரசு சிங்கப்பூரில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் நடைமுறையில் உள்ள தடுப்பூசிகளுக்கு குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்று கெஜ்ரிவால் கூறி இருந்தார். இந்த நிலையில் தங்கள் நாட்டில் புதிய திரிபு வைரஸ் பரவவில்லை என்று சிங்கப்பூர் விளக்கம் அளித்துள்ளது.
சிங்கப்பூர் விளக்கம்
இது தொடர்பாக இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' சிங்கப்பூரில் ஒரு புதியகொரோனா வைரஸ் திரிபு உள்ளது என்ற கூற்றில் எந்த உண்மையும் இல்லை. சிங்கப்பூரில் சமீபத்திய வாரங்களில் குழந்தைகள் உட்பட பல்வேறு வயதினருக்கும் B.1.617.2 என்ற ஏற்கனவே இந்தியாவில் பரவி இருக்கும் திரிபு வைரஸ் உள்ளதாக பைலோஜெனடிக் சோதனை காட்டுகிறது. சிங்கப்பூர் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் வெற்றிகரமான நாடுகளில் ஒன்றாகும். குழந்தைகளை பாதிக்கும் எந்தவொரு தரவுகளும் இல்லை' என்று கூறியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ட்வீட்டை மேற்கோள் காட்டி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.