சிங்கப்பூரில் வேக்சின் போட்டவர்களை.. தொடர்ந்து தாக்கும் கொரோனா.. என்ன காரணம்? ஆய்வாளர்கள் விளக்கம்
சிங்கப்பூர்: கடந்த 4 வாரங்களில் சிங்கப்பூர் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றில் இரண்டு பேர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாகும்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன. தற்போதைய சூழலில் வேக்சின்கள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், அனைத்து நாடுகளுக்கும் தேவையான வேக்சின்கள் கிடைப்பதில்லை. அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த வரை வேக்சின் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன.

சிங்கப்பூர்
அப்படி தொடக்கம் முதலே வேக்சின் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். 57 லட்சம் பேரைக் கொண்ட சிங்கப்பூர் ஏற்கனவே தனது மக்கள்தொகையில் சுமார் 75% குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது. அதேபோல அங்குக் குறைந்தது 50% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அங்குப் பெரியளவில் மீண்டும் அதிகரிக்கவில்லை.

வேக்சின் போட்டவர்களுக்கும் கொரோனா
கடந்த 28 நாட்களில் சிங்கப்பூர் நாட்டில் 1096 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 484 பேர் (44%) முழுவதுமாக வேக்சின் எடுத்துக் கொண்டவர்கள். அதேபோல 30% ஒரு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள். மேலும் 25% பேர் வேக்சின் போட்டுக் கொள்ளாதவர்கள் ஆகும். இத்தகவலைச் சிங்கப்பூர் அரசு உறுதி செய்துள்ளது.

தீவிர பாதிப்பு இல்லை
இருப்பினும், கொரோனா உறுதி செய்யப்பட்ட பெரும்பாலானோருக்கு லேசான கொரோனா பாதிப்பே ஏற்பட்டுள்ளது. வெறும் ஏழு பேருக்கு மட்டுமே ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டுள்ளது. அதிலும் ஆறு பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஆகும். கொரோனா தடுப்பூசி தீவிர பாதிப்பை எந்தளவு கட்டுப்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு மிகச் சிறந்த உதாரணம் என்று அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video

வேக்சின் மட்டுமே ஒரே ஆயுதம்
சிங்கப்பூர் நாட்டில் பைசர் மற்றும் மாடர்னா வேக்சின்களை கொண்டு தடுப்பூசி பணிகள் நடைபெற்று வருகிறது. டெல்டா கொரோனா வைரசால் வேக்சின் தடுப்பாற்றல் குறைகிறது என்றாலும் அவை தீவிர கொரோனா பாதிப்பையும் உயிரிழப்புகளைக் குறைக்கவே செய்கிறது. அதாவது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஒருவர் எடுத்துக் கொண்டால், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. அப்படியே ஏற்பட்டாலும், அதனால் அவருக்கு மூச்சுத்திணறல் போன்ற மோசமான பாதிப்புகளோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படாது என ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications