பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க.. 'காதல் மந்திரம்'! ஆன்மீக கடையில் அலைமோதும் கூட்டம்
சிங்கப்பூர்: பிரிந்த காதலர்களை ஒன்று சேர்க்க சிங்கப்பூரில் காதல் மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதை பயன்படுத்துவதன் மூலம் காதலர்கள் நிச்சயம் ஒன்று சேர்வதாக பலரும் நம்புகின்றனர்.
சிங்கப்பூர் கடை: சிங்கப்பூரில் ஆன்மீக அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை ஜேம்ஸ் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு பிரிந்த காதலர்களை ஒன்று சேர்க்க புனித சடங்குகள் நடத்தப்படுகின்றன. சிங்கப்பூரில் பல இடங்களில் இப்படியான கடைகள் செயல்பட்டு வந்தாலும், ஜேம்ஸ் நடத்தும் மந்திர கடைகளுக்கு கூட்டம் அலைமோதுகிறது. இந்த விஷயத்தில் தனக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் இருப்பதாக ஜேம்ஸ் கூறுகிறார். காதலர்களை ஒன்று சேர்க்க பிரத்யேக மந்திரம் போதிக்கப்படுவதாகவும் இதற்காக ரூ.31,000 வரை கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இரத்தப்புழு காதல் சடங்கு: காதலர்களை ஒன்று சேர்க்கும் சடங்குக்கு, 'இரத்தப்புழு காதல் சடங்கு' என பெயரிடப்பட்டிருக்கிறது. இது குறித்த தகவல்களை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ஊடகம் வெளியிட்டிருக்கிறது. சிங்கப்பூர் தொடங்கி, மலேசியா, கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் வரை இந்த காதல் சடங்குகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த சடங்குகளுக்கான அறிவை தங்களது பாரம்பரிய பண்டைய அறிவு மூலம் பெற்றிருப்பதாக ஜேம்ஸ் கூறியுள்ளார். அவரது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
காதல் மந்திரம்: பிரிந்தவரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வருபவர்களுக்கு இவர் மந்திரத்தை போதிக்கிறார். அவரது தாய் மொழியில்தான் மந்திரம் போதிக்கப்படுகிறது. மீண்டும் சேர விரும்புவர்கள், தாங்கள் யாரை காதலிக்கிறார்களோ அவர்களின் போட்டோவை கொடுக்க வேண்டும். அதேபோல, வேறு சில தகவல்களையும் கொடுக்க வேண்டும். இதை வைத்து ஜேம்ஸ் மந்திரம் செய்கிறார். இவரது மந்திரம் பலிப்பதாகவும், தங்களுடைய காதலர்கள் தங்களிடம் மீண்டும் வந்து சேர்ந்ததாகவும் பலரும் கூறி வருகின்றனர்.
சீனாவில் தடை: சீனாவில் இதுபோன்ற மாந்திரீக செயல்களுக்கு தடை இருக்கிறது. எனவே பலரும் சிங்கப்பூர் போன்ற பக்கத்து நாடுகளில் உள்ள மாந்திரீகர்களை நாடுகின்றனர். குறிப்பாக சீனர்கள் ஜேம்ஸின் கடைக்கு அதிக அளவில் வருகை தருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில், தன்னை விட்டு சென்ற பெண் மீண்டும் சேர வேண்டும் என்று சூனியம் வைத்தாக 10 பேரை உள்ளூர் போலீசார் கைது செய்திருந்தனர்.
மூடநம்பிக்கை: என்னதான் ஜேம்ஸின் கடைக்கு நிறைய ஆட்கள் வந்தாலும், பலரும் இதை ஒரு மூடநம்பிக்கை செயல் என்றே விமர்சிக்கின்றனர். ஒருவரின் சம்மதத்தை மந்திரங்கள் மூலம் பெற முடியாது, மாறாக அவர் மீது நிபந்தனையற்ற அன்பை செலுத்துவதன் மூலம்தான் பெற முடியும் என்று பலரும் கூறுகின்றனர். மந்திரம், மாந்திரீக சடங்குகள் மூலம் பணமும், நேர இழப்பும்தான் ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
என்ன மக்களே இந்த மந்திர, மாந்திரீக விஷயங்களை நீங்களும் நம்புகிறீர்களா என்ன?












Click it and Unblock the Notifications