சிராவயல் மஞ்சுவிரட்டில் சோகம்.. 12 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலி.. வேடிக்கை பார்க்கப்போய் வினை!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டில், 12 வயது சிறுவன் உட்பட 2 பார்வையாளர்கள் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3ஆம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பது வழக்கம். அந்தவகையில், புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு இன்று காலை தொடங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளையும், நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்துவிட்டபோது எதிர்பாராத விதமாக மாடு முட்டி, மஞ்சுவிரட்டு பார்க்க வந்திருந்த 12 வயது சிறுவன் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன் வலையபட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் (எ) ராகுல் என்பது தெரியவந்துள்ளது. மேலும், 35 வயது இளைஞர் ஒருவரும் மாடு முட்டி பலியாகியுள்ளார்.
சிராவயல் மஞ்சுவிரட்டில் இன்று 2 பேர் பலியாகியுள்ளனர். மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிராவயல் மஞ்சுவிரட்டில் ஆண்டுதோறும் இதுபோல் உயிரிழப்புகள் நேர்வது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications