முயல் வேட்டைக்காக சென்ற அப்பா, இரு மகன்கள்.. பன்றிக்கான மின்வேலியில் சிக்கி பலி.. சிவகங்கையில் சோகம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே முயல் வேட்டைக்காக சென்ற அப்பா மற்றும் இரு மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்துக்குள்பட்ட முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யங்காளை. இவருக்கு அஜித், சுதந்திரபாண்டி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
சுதந்திரபாண்டி அண்மையில் நடந்த காவலர் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். மேலும் ராணுவ வீரரான அஜித்திற்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

குழந்தையை பார்ப்பதற்காக அஜித் விடுப்பு எடுத்துக் கொண்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் இன்று காலை அய்யங்காளை தனது இரு மகன்களுடன் அருகில் உள்ள திருப்பாச்சேத்தி மாரநாடு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பன்றி பிடிக்க போடப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக மூவரும் சிக்கினர். இதில் அய்யங்காளை, அஜித், சுதந்திரபாண்டி ஆகிய மூவரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாச்சேத்தி காவல் துறையினர் மூவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications